செமி ஃபைனல் ரேஸ்
அதாவது குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் மோசமாக தோற்றது. இந்த தோல்வியால் வெறும் 5 புள்ளிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. மற்றொருபுறம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும்.
இந்திய அணிக்கு சிக்கல்
இந்திய அணி ஏற்கனவே தகுதிப்பெற்றுவிட்ட போதும், ஜிம்பாப்வே போட்டி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி முதலிடத்தை உறுதி செய்யும். குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும் உள்ளது. அரையிறுதியை பொறுத்தவரையில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள அணியும், குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ள அணியும் மோதும், மற்ற இரண்டு அணிகளும் மோதும்.
விதிமுறை என்ன
எனவே இந்திய அணி முதலிடத்தை உறுதி செய்துவிட்டால், குரூப் ஏவில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் மோதலாம். இங்கிலாந்து அணி சற்று சொதப்பி வருவதால், அதனை வீழ்த்துவதற்கும் சற்று சுலபமாக இருக்கும். இதுவே இந்திய அணி தோல்வியடைந்துவிட்டால் கதை மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்திய அணி தோல்வியடைந்து, வங்கதேச அணியை பாகிஸ்தான் வீழ்த்தி வந்துவிட்டால், இரு அணிகளும் அரையிறுதிக்கு செல்லும்.
ரன்ரேட் சிக்கல்
ஆனால் இரண்டுமே ஒரே புள்ளிகளுடன் இருப்பதால் ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் கொடுக்கப்படும். அதன்படி பார்த்தால் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிக ரன்ரேட்டுடன் உள்ளது. இப்படி ஒருவேளை நடந்துவிட்டால், அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாக் அவுட்களில் நியூசிலாந்திடம் இந்தியா எப்போதுமே சொதப்புவது குறிப்பிடத்தக்கது.