லைவ் சாட்டில் கோலி & வில்லியர்ஸ்
கொரோனா வைரஸ் ஊரடங்கு பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் உலகின் பல வீரர்களை இணைத்து இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதையொட்டி கேப்டன் விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் நேரலையில் கலந்துரையாடினர். இந்த உரையாடலின்போது இந்த நெருக்கடி நேரத்தில் மனதைரியத்துடன் இருக்க ரசிகர்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நேரலையில் உள்ளம் கவர்ந்த அனுஷ்கா
இந்த நேரலையில், விராட் கோலியும் டீ வில்லியர்சும் இணைந்து பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினர். இந்த உரையாடலின் இடையில், விராட் கோலி இருந்த அறைக்கு வந்து, அங்கு விளக்குகளை எரியவிட்ட அனுஷ்கா சர்மாவிற்கு நன்றி தெரிவித்த விராட் கோலி, 'நன்றி மை லவ்' என்று கூறியது அனைவரையும் கவரும்வகையில் இருந்தது. இதை பிரபல புகைப்பட கலைஞர் மானவ் மங்க்லானி தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டார்.
இருவீரர்களும் முடிவு
இந்நிலையில் கடந்த 2016 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் துவக்க வீரர்களாக களமிறங்கி சதமடித்து சாதனை புரிந்த போட்டியின் பேட் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஏலமிட்டு, அந்த தொகையை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் கொரோனா நிதிக்காக அளிக்க முடிவெடுத்துள்ளதாக இரு வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
சதமடித்து சாதனை
கடந்த 2016 ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் தலா சதமடித்து 229 ரன்களுக்கு முதல் விக்கெட் விழுமாறு சிறப்பாக ஆடினர். இந்த சிறந்த பார்ட்னர்ஷிப்பிற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் அந்தப் போட்டியின், பேட், ஜெர்சி மற்றும் க்ளொவுட்சை ஆன்லைனில் ஏலமிட்டு இருநாடுகளின் கொரோனா நிதிக்காக வழங்கவுள்ளதாக உரையாடலின் போது விராட் கோலி மற்றும் வில்லியர்ஸ் தெரிவித்துள்ளனர்.