சென்னை: அதிரடி ரன் குவிப்பு, மிரளவைக்கும் பந்து வீச்சு, கடைசி வரை திக் திக், பரபரப்புகளுக்கு மத்தியில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இடையில், சில பாசப் பிணைப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. இது போட்டியைவிட வெகுவாக பாராட்டப்படுகிறது. அதில் டோணியின் அதிரடியைவிட, அவருடைய மகள் ஜிவாவின் வீடியோதான் தற்போது ஹாட் ஹிட்.
ஐபிஎல் சீசன் 11 டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் மகேந்திர சிங் டோணியின் சிஎஸ்கே அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதின. சிஎஸ்கே கேப்டன் டோணி, முதுகுவலியுடன் விளையாடி ஆட்டமிழக்காமல் 79 சேர்த்தார். ஆனாலும், சிஎஸ்கே அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டிக்குப் பிறகு, தான் வலியுடன் விளையாடியதை அவர் கூறியதை கேட்கும்போது, எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் நிச்சயம் உருகியிருப்பார்கள். இந்த நிலையில், இந்த போட்டியின்போது, இரண்டு பாசப் பிணைப்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
டோணியைவிட, அவருடைய மகள் ஜிவா, சமூகதளங்களில் மிகவும் பிரபலம். மழலைப் பேச்சுடன், பாசத்தை வெளிப்படுத்தும் அந்தக் குட்டியின் பல வீடியோக்கள் டாப் டக்கர். அந்த வரிசையில், நேற்றைய போட்டியின்போது, டோணி விளையாடிக் கொண்டிருக்கும்போது, கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 3 வயதாகும் ஜிவா, அப்பாவை உடனே வரச் சொல்லுங்க. அவரைக் கட்டிக்கணும் போல இருக்கு என்று சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
சிஎஸ்கேவின் ஜெர்சி அணிந்திருந்தவரிடம், நீங்களும்தான், சிஎஸ்கே சட்டை போட்டிருக்கீங்க. நீங்க உள்ளே போய், அப்பாவை வரச் சொல்லுங்க என்று மழலையாக சொல்லும் அழகே தனி அழகுதான்.
இது ஒருபுறம் இருக்க, இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ள டோணிக்கும், பஞ்சாப் அணியின் வீரரான யுவராஜ் சிங்குக்கும் உள்ள நட்புதான் மற்றொரு ஹிட் வீடியோ. போட்டியின்போது, முதுகுவலிக்காக, மைதானத்தில் டோணி சிகிச்சை பெறுகிறார். அப்போது, அங்கு வந்த யுவராஜ் சிங், செல்லமாக டோணியின் தலையைப் பிடித்து ஆட்டுவார். இது அவர்களுக்குள் உள்ள நட்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அதேபோல் டோணியின் மனைவி சாக் ஷியும், யுவராஜின் மனைவி ஹசேல் கீச்சுக்கும் இடையே நட்பு உள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து நேற்றைய போட்டியை பார்த்து ரசித்த படங்களும் வெளியாகி உள்ளது.