4வது இடத்தில் இங்கிலாந்து
இங்கிலாந்து அணி தற்போது 6 போட்டிகளில் 2 தோல்விகள், 4 வெற்றிகள் என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்துக்கு 3 போட்டிகள் பாக்கி இருக்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை இங்கிலாந்து சந்திக்க வேண்டும்.
27 ஆண்டு வரலாறு
இந்த 3 அணிகளுக்கு எதிராக வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பது இங்கிலாந்துக்கே தெரியும். காரணம் பழைய வரலாறு தான். 27 ஆண்டுகளாக உலக கோப்பையில் இந்த 3 அணிகளை இங்கிலாந்து வென்றதில்லை.
வாய்ப்புள்ள அணிகள்
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்து அணியின் வெற்றி, தோல்வி தான் அரையிறுதிக்காக 4 அணிகளை முடிவு செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று சொல்லலாம். முதலில் இங்கிலாந்து அணியின் அரையிறுதி பயணம் நிறைவேறுமா என்று பார்ப்போம். காரணம்... இலங்கையிடம் பெற்ற தோல்வி கொஞ்சம் அந்த அணியை ஆட்டம் காண வைத்திருக்கிறது. இங்கிலாந்து இப்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
12 புள்ளிகள் வரும்
அடுத்த 3 போட்டிகளும் ரொம்ப, ரொம்ப கடினமானவை. எனவே, அரையிறுதி வாய்ப்பைப் பெற வேண்டுமானால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போது 12 புள்ளிகளுடன் ஜம்மென்று அரையிறுதிக்குள் சென்று உட்கார்ந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சறுக்கினால், என்ன நடக்கும்? அதற்கும் சில கணக்கீடுகள் இருக்கின்றன. அதாவது... இங்கிலாந்து ஒரு போட்டியில் ஜெயித்து, 2ல் மண்ணை கவ்வினால் வருவது 10 புள்ளிகள். இங்கிலாந்தை அரையிறுதிக்குள் நுழைய விடாமல் தடுக்க இலங்கை எஞ்சிய 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.
11 புள்ளிகள் கணக்கு
2 வெற்றி, ஒரு சமன் என்ற கணக்கில் 11 புள்ளிகள் பெற்றால் இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்ப முடியும். தற்போதைய நிலவரப்படி, இலங்கை 6 புள்ளிகளுடன், 5வது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம், பாகிஸ்தான்(இப்போது தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இருப்பதை கவனிக்கவேண்டும்) அணிகளும் மற்ற போட்டிகள் அனைத்திலும் வென்றால் 11 புள்ளிகள் வரும். அப்போது டை பிரேக்கர் முறை பயன்படுத்தப்பட்டு, வெற்றிகள் கணக்கிடப் பட்டு, ஒரு அணி உள்ளே போகும். இங்கிலாந்தின் வாய்ப்பு அதோ கதி தான். ஒருவேளை இங்கிலாந்து அடுத்துவரும் 3 போட்டிகளிலும் தோற்றாலும் அரையிறுதிக்கு செல்லலாம்.
அதிர்ஷ்டம்
அதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் மலையளவு அதிர்ஷ்டம் கை கொடுக்க வேண்டும். அதாவது இலங்கை எஞ்சிய 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி தான் பெற வேண்டும். இங்கிலாந்தின் தற்போதைய 8 புள்ளிகளுக்கு மேல் எந்த அணியும் போக கூடாது. இலங்கை அணிக்கு இன்னும் இந்தியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் மோதவேண்டி இருக்கிறது. இரு போட்டிகளில் வென்றால் 10 புள்ளிகள் பெறும். அதேசமயம், இங்கிலாந்தும், நியூசிலாந்தும் தங்களுக்கு மீதம் இருக்கும் 3 போட்டிகளிலும் ஜெயிக்க கூடாது.
இந்தியா நிலைமை எப்படி?
இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல வேண்டும். இவை எல்லாம் நடந்தால், இலங்கை அரையிறுதிக்குள் அம்சமாக செல்லலாம். இல்லாவிட்டால் இலங்கை மீதமுள்ள அனைத்துப் போட்டிகளையும் வென்றால், 12 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், 12 புள்ளிகள்தான் அளவு என்று கூற முடியாது. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு வர வேண்டுமானால், இங்கிலாந்து மீதமுள்ள அனைத்திலும் தோற்க வேண்டும். இலங்கை ஒரு போட்டிக்கு மேல் ஜெயிக்க கூடாது. அதாவது 8 புள்ளிகளை இலங்கை தாண்ட கூடாது.
வங்கதேச வாய்ப்பு
வங்கதேசம் மீதமிருக்கும் 3 ஆட்டங்களில் 2 வெற்றிகள் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அந்த அணி அடுத்ததாக இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுடன் மோதுகிறது. இதில் ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெறலாம், இந்தியா, பாகிஸ்தானுடன் ஏதாவது ஒரு அணிக்கு நெருக்கடி கொடுத்து ஜெயிக்கலாம் அல்லது இரண்டிலும் தோற்கலாம்.
செமி பைனலில் பாக்?
அதேசமயம், பாகிஸ்தான்மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் வென்றால் 9 புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அடுத்துவரும் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் 8 புள்ளிகளோடு நின்றுவிடும் .அப்போது பாகிஸ்தான் அரையிறுதி செல்ல வாய்ப்பு உண்டு. வங்கதேசம் 2 போட்டிகளில் வென்றால், 9 புள்ளிகளை இரு அணிகளும் பெறும். அப்போது டைபிரேக்கர் விதி பயன்படுத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இது நடந்தால் பாகிஸ்தான், வங்கதேசம் இருஅணிகளில் ஒரு அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.
இரண்டில் ஒன்று
இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அதிகபட்சமாக 9 புள்ளிகள் வரை எடுத்து, இங்கிலாந்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் தோற்றால், வங்கதேசம், பாகிஸ்தான் இரு அணிகளில் ஒரு அணி வர வாய்ப்புள்ளது. என்ன.... தலையை சுற்றுகிறதா...? இந்த கணக்கீடுகள் எல்லாம் அணிகள் களத்தில் விளையாடி பெறும் முடிவுகள் அடிப்படையில் மாறக்கூடும்.