தோனி ஓய்வு
2021இல் தோனிக்கு 40 வயது ஆகி விடும். அதன் பின் அவர் கிரிக்கெட் ஆட விரும்ப மாட்டார். அப்போது தோனி ஓய்வு பெற்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே வலம் வருகிறது.
ரெய்னா?
பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்கள் கண்ணை மூடிக் கொண்டு, "வேற யார்.. சின்ன தல.. சுரேஷ் ரெய்னா தான் அடுத்த கேப்டன்" என்பார்கள். ஆனால், பல்வேறு சூழ்நிலைகளையும் அலசி ஆராய்ந்தால் அதற்கு வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.
சிஎஸ்கே அணியின் பலம்
சிஎஸ்கே அணியின் பலம் என்பது நீண்ட காலம் அணியில் நீடித்து இருக்கும் வீரர்கள் தான். அதே போல, நீண்ட காலமாக மாறாத கேப்டன்சியும் பெரிய பலம். தோனி தன் 27 வயதில் இருந்தே சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே போன்றே அடுத்த கேப்டனும் நீண்ட காலம் செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.
வெற்றிடம் ஏற்படும்
தோனி ஓய்வு பெற்றுச் செல்லும் போது மிகப் பெரிய வெற்றிடம் ஏற்படும். அதை ரெய்னாவால் ஓரளவு நிரப்ப முடியும் என்றாலும், அவருக்கும் அப்போது 36 வயது ஆகி இருக்கும். அது தான் சிக்கல். சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படியும் நீண்ட கால அடிப்படையில் தான் அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் என நாம் எளிதாக ஊகிக்கலாம்.
இளம் வீரர்
ஒருவேளை சுரேஷ் ரெய்னா ஒரு ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக செயல்படலாம். ஆனால், நிச்சயம் ஓரளவு அனுபவம் கொண்ட, தலைமைப் பண்பு கொண்ட இளம் வீரரையே சிஎஸ்கே அணி நிர்வாகம் கேப்டனாக நியமிக்க விரும்பும்.
வயதாகி விடும்
அப்படிப் பார்த்தால் தோனிக்கு பின் தற்போது சிஎஸ்கே அணியின் முக்கிய அனுபவ வீரர்களாக இருக்கும் சுரேஷ் ரெய்னா, பிராவோ, பாப் டுபிளெசிஸ் என யாருமே கேப்டனாக வர வாய்ப்பில்லை. அவர்கள் அனைவரும் தோனி ஓய்வு பெரும் போது 36 முதல் 38 வயதை அடைந்து இருப்பார்கள்.
யார் அந்த வீரர்?
இவர்களைத் தாண்டி இளம் வீரர்களை பார்க்கும் போது அனுபவத்துடன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக ஆடக் கூடிய ஒருவர் சிஎஸ்கே அணியில் இருக்கிறார். அவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு பின் ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆக மிக மிக அதிக வாய்ப்பு உள்ளது.
ஜடேஜாவை ஏற்பார்களா?
தோனியின் ரசிகர்கள் நிச்சயம் ஜடேஜாவை 100 சதவிகிதம் சிஎஸ்கே அணி கேப்டனாக ஏற்றுக் கொள்வார்கள். அதன் மூலம் சிஎஸ்கே - தோனி ரசிகர் கூட்டத்தை அப்படியே தக்க வைக்க முடியும். அடுத்து தோனி ஓய்வு பெறும் போது ஜடேஜாவின் வயது 33 ஆகி இருக்கும்.
ஏன் ஜடேஜா?
ஜடேஜா நல்ல திடமான வீரர். இதுவரை காயங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதில்லை. அதிக அனுபவம் வாய்ந்தவர். அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு அவரால் கேப்டனாக செயல்பட முடியும். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலமாக இடம் பெற்றுள்ளார். எனவே, ஜடேஜா சிஎஸ்கே அணியின் முதல் தேர்வாக இருப்பார்.
உலகக்கோப்பை ஹீரோ
2௦19 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி தான் தோனியின் கடைசிப் சர்வதேச போட்டி என கருதப்படுகிறது. அந்தப் போட்டியில் ரசிகர்களால் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் ஜடேஜா. அந்தப் போட்டியில் அவரது ஆட்டம் யாராலும் மறக்க முடியாதது. அதுவும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜாவை நியமிக்க ஒரு காரணமாக அமையும்.