மும்பை: உலகக் கோப்பை டி 20 போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.
மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. முதல் குரூப்பில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் இன்று மும்பையில் மோதின.
தனது முதல் போட்டியில் இலங்கையை அச்சுறுத்திய அணி ஆப்கானிஸ்தான். எனவே தென் ஆப்பிரிக்கா இன்று கவனமாக ஆடியது.
ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை தவிடுபொடியாக்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் அழகாக ரன் குவித்தனர். குவின்டான் டி காக் 31 பந்துகளில் 45 ரன்களை விளாசினார்.
அம்லா 5 ரன்களில் ஏமாற்றினார். டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார். பாப் டு பிளஸிஸ் 41 ரன்கள் விளாசினார். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களைக் குவித்தது தென் ஆப்பிரிக்கா.
பின்னர் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஷசாத் தென்னாப்பிரிக்காவின் பந்துகளை வெளுவெளுவென வெளுத்தார். 3.6 ஓவரில் 52 ரன்களை தென்னாப்பிரிக்கா குவித்திருந்த நிலையில் ஷசாத் அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் 44 ரன்களைக் குவித்திருந்தார். இதில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். ஆனால் இந்த வேகத்தை மற்ற வீரர்கள் காட்டவில்லை.
எப்படியும் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த ரன்களை சேசிங் செய்துவிடுவது என்ற முனைப்பை ஆப்கான் வீரர்கள் காட்டி வந்தனர். 10.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்களை எடுத்திருந்தது ஆப்கான் அணி. அந்த அணியின் முன்வரிசை வீரர்களான குல்பதின் நைப் 26, நூர் அலி ஜத்ரான் 25, ஷமியுல்லா 25 ரன்களை எடுத்தனர். ஆனால் பின்வரிசை வீரர்கள் ரன்குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பரிதாபமாக ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 18.3 ஓவரில் ரஷீத் கான் 11 ரன்களிலும் தவ்லத் ஜத்ரான் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஷாபூர் சத்ரான் ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். முதல் 10 ஓவர்களில் அபாரத்தை வெளிப்படுத்திய ஆப்கான் அடுத்த 10 ஓவர்களிலும் அதே வேகத்தை காட்டவில்லை.
ஆப்கானால் 20 ஓவர் முடிவில் 172 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. ஆகையால் தென் ஆப்பிரிக்கா 37 ரன்களில் வெற்றியை ருசித்தது. தென் ஆப்பிரிக்காவின் மோரிஸ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.