என்னா ஒரு அதிரடி
அதிரடி என்றால் இதுதான். கிளன் மேக்ஸ்வெல்லைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த ஐபிஎல் ரசிகர்களை நேற்று தனது ஒரே போட்டியில் கட்டிப் போட்டு விட்டார் யூசுப் பதான். அதிரடி என்றால் இதுதான். பிரமாதமான ஆட்டம்.
22 பந்துகளில் வெளுத்தெடுத்த 72
22 பந்துகளை மட்டுமே சந்தித்த யூசுப் பதான் வெறி கொண்டவர் போல வி்ளையாடி 72 ரன்களைக் குவித்து கொல்கத்தாவுக்கு பிரமாதமான வெற்றியை ஈட்டுத் தந்தார்.
15 பந்துகளில் அரை சதம்
இதில் 15 பந்துகளிலேயே தனது அரை சதத்தைத் தொட்டு ஐபிஎல் வரலாற்றிலேயே அதி வேகமான அரை சதத்தையும் போட்டு சாதனை படைத்தார்.
2 முறை உயிர் தப்பி .. பேட்டிங் ரணகளம்
இதில் ரன் எடுக்காமல் ஒருமுறையும், 15 ரன்களில் ஒருமுறையும் அவுட் ஆக தெரிந்தார் யூசுப். ஆனால் அதில் தப்பிய அவர் அடுத்து விளாசித் தள்ளி விட்டார்.
நொந்து வெந்து போன ஸ்டெயின் - ரசூல்
ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் டேல் ஸ்டெயினும் ரசூலும்தான் யூசுப்பிடம் சிக்கி சின்னாபின்னாமானார்கள். இருவரது ஓவர்களையும் பிரித்து மேய்ந்த யூசுப், தோல்வியை நோக்கிப் போய் கொண்டிருந்த கொல்கத்தாவுக்கு பிரமாண்டமான வெற்றியை உறுதி செய்து விட்டார்.
14.2 ஓவர்களிலேயே
புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் 15.2 ஓவர்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் கொல்கத்தா இருந்தது. ஆனால் யூசுப் அதிரடியால் இந்த வெற்றியை 14.2 ஓவர்களிலேயே சாதித்து விட்டது.
துள்ளிக் குதித்த ஈடன் கார்டன்
யூசுப்பின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே துள்ளிக் குதித்து சந்தோஷித்தது.
7 சிக்ஸ்.. 5 பவுண்டரிகள்
யூசுப் நேற்றைய போட்டியில் 7 சிக்ஸர்களையும், 5 பவுண்டிரிகளையும் விளாசித் தள்ளி விட்டார்.
பஞ்சாபுடன் முதல் குவாலிபயரில் மோதல்
யூசுப் மூலம் கிடைத்த இந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது முதல் குவாலிபயர் போட்டியில் முதலிடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது. மே 27ம் தேதி இப்போட்டி இதே ஈடன் கார்டன் மைதானத்தில் தான் நடைபெறப் போகிறது.
பாவம்ய்யா ஸ்டெயின்
உலகின் நம்பர் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டெயின்தான். ஆனால் அவரை நேற்று மண்டை காய வைத்து விட்டார் யூசுப். அவரது கடைசி ஓவரின்போது 4, 6, 6, 4, 4, 2 என்று 26 ரன்களைக் குவித்து விட்டார். ஸ்டெயின் முகம் செத்துப் போய் திரும்பினார்.
ரசூல் அய்யோ பாவம்
அதேபோல சுழற்பந்து வீச்சாளர் ரசூலின் ஓவரில் 22 ரன்களைப் பிரித்து விட்டார் யூசுப். அவரும் நொந்து போய் விட்டார்.
மொத்தத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல்லுக்கு நேற்று சரியான இந்திய பதிலடியாக அமைந்தது யூசுப்பின் சுனாமியாட்டம்.