எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சவாலாக இருந்தது ஒரு இந்திய பவுலர்: மனம் திறந்த சங்ககாரா
கொழும்பு: சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர் இலங்கையின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குமார் சங்ககரா. இவர் சர்வதேச போட்டியில் இருந்து நேற்று விடை பெற்றார். 134 டெஸ்டில் விளையாடி 12,400 ரன்கள் குவித்துள்ளார் சங்ககாரா. இதில் 38 சதம், 52 அரை சதம் அடங்கும்.
பிரியாவிடை நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்கள் கேள்விகளுக்கு சங்ககாரா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

ஜாகீர், ஸ்வான்
இந்த தொடரில் அஸ்வின் எனக்கு சவாலாக இருந்தார். 4 இன்னிங்சுகளிலும் அஸ்வின் பந்தில் அவுட் ஆனேன். ஆனால் எனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் (இந்தியா), சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் (இங்கிலாந்து) ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்வதுதான் சவாலாக இருந்தது.

வாசிம் ஆல்-டைம் பேவரைட்
பல நேரங்களில், இவர்களது பந்துவீச்சில் என்னால் சிறப்பாக செயல்பட இயலவில்லை. இருப்பினும் யுத்திகளை மாற்றிக்கொண்டு இவர்களை எதிர்கொள்ள முயற்சி செய்துள்ளேன். வாசிம் அக்ரம் பந்து வீச்சு ஸ்டைல் சிறப்பாக இருக்கும். நல்லவேளை அவரது பந்துவீச்சு காலத்தில் நான் இளம் வீரராக இருந்தேன். அப்படியும், ஒருமுறை அவரது பந்து வீச்சில் அவுட் ஆகியுள்ளேன்.

பிராட்மேனுடன் ஒப்பீடு
பிராட்மேனுக்கு சமமான வீரர் என்று என்னைப் பற்றி எனது பயிற்சியாளர் கூறியுள்ளார். அவர் அநேகமாக ஜோக் அடித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில், பிராட்மேன் பேட்டிங்கை நான் வீடியோவில் பார்த்து இருக்கிறேன். அவர் ஒரு அபூர்வமான வீரர் ஆவார். கிரிக்கெட் சகாப்தத்தில் அவர்தான் சிறந்த வீரர். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது. இவ்வாறு சங்ககாரா கூறினார்.

இரட்டை சதம் சாதனை
டெஸ்ட் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்தவர் பிராட்மேன். அவர் 52 டெஸ்டில் 12 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சங்ககரா 11 இரட்டை சதம் அடித்துள்ளார். லாரா 9 இரட்டை சதம் விளாசியுள்ளார். இதைத்தான் சங்ககாராவின் பயி்சியாளர் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications