1 கோடி பேர் கொண்ட பெலாரஸ்
பெலராஸ் நாடு கிட்டத்தட்ட 1 கோடி பேர் வசிக்கும் நாடாகும். ரஷ்யாவுக்கு அருகில் உள்ள இந்த நாட்டில் கொரோனோவைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை பலர் இறந்துள்ளனர். இருப்பினும் இந்த நாட்டு அதிபர் அலெக்சாண்டர் கொஞ்சம் கூட பயப்படாமல் உள்ளார். இந்த வைரஸால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கூறி வருகிறார்.
தொடரும் விளையாட்டு
மேலும் மக்கள் பயப்படாமல் வெளியில் நடமாடுமாறும், விளையாட்டுக்களில் பங்கேற்குமாறும் அவர் கூறி வருகிறார். அவரே சமீபத்தில் ஐஸ் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டார். எங்காவது வைரஸைப் பார்த்தீங்களா.. நானும் பார்க்கவில்லை. அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றும் அவர் பேட்டி கொடுத்தார். இதற்கிடையே, அங்கு கால்பந்துப் போட்டிகளும் தங்கு தடையின்றி நடக்கிறது.
ஆபத்து அதிகரிப்பு
அங்கு நடைபெறும் கால்பந்துப் போட்டிகளுக்கு நல்ல கூட்டம் வருகிறது. அவர்களில் பலர் மாஸ்க் போடாமல் வருகின்றனர். உள்ளே வருபவர்களுக்கு கையைத் துடைத்துக் கொள்ள சானிட்டைசர் தருகிறார்கள். டெம்பரேச்சர் பார்க்கிறார்கள். ஆனாலும் ரிஸ்க் அதிகமாகவே உள்ளது. ரசிகர்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வருவதால் பெரும் அபாயம் காத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஹூ தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால் பெலாரஸ் அரசு கண்டு கொள்வதாக இல்லை.
இதுவரை 23 பேர் பலி
பெலராஸ் நாட்டில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றே அந்த நாட்டு அதிபர் சொல்கிறார். போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தேவைப்பட்டால் காலி மைதானங்களில் போட்டியை நடத்துவோம் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் நிலைமை அபாயகரமானதாக இருப்பதாக பிரபல பெலாரஸ் கால்பந்து வீரர் நிக்கோலய் ஸோல்டோவ் கூறியுள்ளார்.