முதல் சர்ச்சை
இந்நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஈரான் அணி வெளியிட்ட ஒரு அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது உலகக்கோப்பை தொடரின் போது இரு அணிகளின் தேசிய கீதங்களும் அரங்கத்தில் ஒலிக்கப்படும். ரசிகர்கள் முதல் அணி வீரர்கள் வரை தேசத்திற்கான மரியாதையை தெரிவித்துவிட்டு, விளையாட தொடங்குவார்கள்.
ஈரான் வீரர்களின் முடிவு
ஆனால் ஈரான் அணி வீரர்கள், நாங்கள் இந்த உலகக்கோப்பை தொடரில் எங்கள் தேசிய கீதத்தை பாட மாட்டோம், மரியாதை தரமாட்டோம் என அறிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த அவர்கள், " எங்கள் நாட்டில் உள்ள அரசின் ஆட்சி பிடிக்கவில்லை, அதனை எதிர்த்து புரட்சி செய்யவே, இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினர்". கூறியபடியே போட்டியில் அவர்கள் பாடவே இல்லை. தேசிய கீதத்தை புறகணிக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
என்ன காரணம்
ஈரான் நாட்டில் சமீபத்தில் சிறையில் வைத்தே ஒரு மாஷா அமினி என்ற இளம் பெண் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார். இஸ்லாமிய மதத்திற்கு உட்பட்ட உடைகளை அணியவில்லை என கைது செய்யப்பட்ட அவர், 3 நாட்கள் சிறையில் இருந்த பின் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்நாட்டின் மக்கள், கொடூர ஆட்சி நடைபெறுவதாக கூறி, அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
ஃபிஃபாவின் கடமை
கடந்த செப்டம்பர் 16ம் தேதியில் இருந்து ஈரான் நாட்டின் ஆட்சியை கலைக்க வேண்டும் எனக்கோரி நாடு முழுவதும் புரட்சிகள் வெடித்து வருகின்றன. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தான் தற்போது கால்பந்து வீரர்களும் களமிறங்கியுள்ளனர். எனினும் ஃபிஃபா அமைப்பு தனது கடமையை செய்துவிட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் தேசிய கீதத்தை போட்டு வருகிறது.