மும்பை: 2019-20 ஐஎஸ்எல் தொடரில் மகுடம் சூட வாய்ப்புள்ள அணிகளாக பெங்களூரு எஃப்சி, எஃப்சி கோவா கருதப்படுகின்றன. ஆனால் 6வது சீசன் ஐஎஸ்எல்-இல் பல திருப்பங்கள் ஏற்படலாம்.
கடந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு வந்த பெங்களூரு எஃப்சி, எஃப்சி கோவா இரண்டுமே அதே அணியை களமிறக்கவுள்ளன.
பெங்களூரு, கோவா இரண்டுக்குமே வெற்றி வாய்ப்பு இருப்பினும் பிற அணிகள் புத்திசாலித்தனமான மாற்றங்களுடன் 2019 ஹீரோ ஐஎஸ்எல்லில் களமிறங்கவுள்ளன.
ஏடிகே போல வேறு எந்த அணியும் கவனத்தை ஈர்த்தது இல்லை. இந்த முன்னாள் சாம்பியன்கள் முன்னணி வீரர்கள் சிலரை ஒப்பந்தம் செய்துள்ளனர். எனவே இவை காகித அளவில் வலுவான அணியாக தோன்றுகிறது.
கடந்தாண்டு கடைசி இடத்தில் இருந்த சென்னையின் எஃப்சி இந்த முறை புதிய மாற்றங்களுடன் வந்துள்ளது. சீசனுக்கு முந்தைய நட்பு ரீதியான ஆட்டங்களை பார்க்கும்போது இதுவும் கடும் போட்டி தரக்கூடும் எனத் தெரிகிறது.
இவற்றுக்கு முன் கோப்பைக்கான அதிக வாய்ப்புள்ள பெங்களூரு எஃப்சி பற்றி பார்ப்போம். எங்கு சரி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து 2 புதிய வீரர்களை சேர்த்துள்ளது பெங்களூரு எஃப்சி. அகஸ்டோ குருனியன், ரஃபால் அகஸ்டோ ஆகிய முக்கிய வீரர்கள் பெங்களூருவுடன் இணைந்துள்ளனர்.
எஃப்சி கோவாவை பொறுத்தவரை ஒரு புதிய வெளிநாட்டு வீரரை கூட சேர்க்கவில்லை. மோர்ட்டடா ஃபால், அகமது ஜாஹு, ஃபெர்ரன் கொரோமினஸ் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து பிரெண்டன் ஃபெர்னாண்டஸ், மந்தர்ராவ் தேசாய் உள்ளனர். இவர்கள் கடந்த சீசனை விட ஒருபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்!
கடந்த சீசனில் லீக் சுற்று போட்டிகளில் 10 அணிகளும் 254 கோல்கள் அடித்திருந்தன. இம்முறை அதை விட அதிக கோல்கள் விழ வாய்ப்புள்ளது. எல்லா அணிகளும் கோல் அடிப்பதில் கில்லாடிகளை தங்கள் அணியில் கொண்டு வந்துள்ளன. கோல் அடிப்பதில் சூரப்புலியான கானா சர்வதேச வீரர் அசமோவா கியான்-ஐ நார்த் ஈஸ்ட் யுனைட்டட் பெற்றுள்ளது.
கடந்த 2 சீசனில் ஏமாற்றம் தந்த கேரளா பிளாஸ்டர்ஸ் இம்முறை அசத்துவதற்காக பார்த்தலோமியூ ஓக்பெச்- சை சேர்த்துள்ளது. கடந்த சீசனில் கோவாவின் கொரோமினசுக்கு அடுத்தபடியாக அதிக கோல் அடித்தவர் ஓக்பெச்.
மும்பை எஃப்சி அணியில் கடந்தாண்டு விடுபட்ட மோடோ சோகூ இந்த முறை சாதிக்க தயாராக உள்ளார்.
புதியவர்களான ஐதராபாத் எஃப்சி, ஒடிஷா எஃப்சி அணிகள் குறுகிய காலத்தில் நல்லதொரு அணியை உருவாக்கியுள்ளன. மார்சிலினோ, மார்க்கோ ஸ்டான்கோவிச் ஆகிய அனுபவ வீரர்களை ஐதராபாத் சேர்த்துள்ளது.
மார்கோஸ் டெபார், சிஸ்கோ ஹெர்னாண்டஸ் போன்ற திறமைசாலிகளை ஒடிஷா சேர்த்துள்ளது.
இந்த சீசனில் பயிற்சியாளர்களும் மாறியுள்ளனர். கேரளா பிளாஸ்டருக்கு மாறிய ஈல்கோ ஷட்டோரிக்கு பதிலாக ராபர்ட் ஜார்னியை நார்த்ஈஸ்ட் சேர்த்துள்ளது. 2014ல் கோப்பை வெல்ல காரணமாக இருந்த அன்டோனியோ ஹெபாஸ்- ஐ ஏடிகோ மீண்டும் இரு கரம் கொண்டு வரவேற்று சேர்த்துள்ளது. ஸ்பெயினில் 25 ஆண்டுக்கும் அதிகமாக பயிற்சி தந்து அனுபவம் பெற்ற அன்டோனியோ இரியோன்டோவை ஜாம்ஷெட்பூர் எஃப்சி தன் பக்கம் வளைத்துள்ளது.
கடந்த சீசன்களை தவிர்த்து விட்டு புதிய போட்டியாளர்கள் இந்த சீசனில் உருவாக உள்ளனர். அணிகளின் முக்கிய வீரர்கள் இடம் மாறியுள்ளனர். ஜாம்ஷெட்பூர் அணியில் இருந்த செர்கியோ சிடோஞ்ச்சா, மரியோ அர்க்கஸ் இம்முறை கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் ஆடுகின்றனர். சென்னையின் எஃப்சி-இல் இருந்த ரஃபால் அகஸ்டோ பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். கேரளா பிளாஸ்டர்சின் செல்ல வீரர் அனஸ் எடத்தோடிகா, இம்முறை ஏடிகேவுக்காக களம் காண உள்ளார்.
இந்த புதிய சீசனில் பார்த்து ரசிக்க வேண்டியவை நிறைய உள்ளது. நிறைய ஆச்சரியங்களை இந்த சீசனில் எதிர்பார்க்கலாம்.
ஐஎஸ்எல் தொடர் இதுவரை - ஒரு பார்வை
மொத்த போட்டிகள் - 373
மொத்த கோல்கள் - 956
அதிக கோல் அடித்த அணி - எஃப்சி கோவா (154)
இந்தியா உட்பட 67 நாடுகளின் 588 வீரர்கள் ஆடியுள்ளனர்.
5 ஆண்டுகளில் ஐஎஸ்எல் போட்டிகளை நேரில் ரசித்தவர்கள் - 70,56,825
Photos Courtesy : ISL Media