கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்…. வருகிறது சூப்பர் கோப்பை போட்டி
டெல்லி: கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தற்போது நடந்து வரும் ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐ-லீக் போட்டிகள் முடிந்த பிறகு, மார்ச் மாதம் சூப்பர் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளது.
கால்பந்து போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில், இரண்டு விதமான லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளும், அதே நேரத்தில் ஐ-லீக் போட்டிகளும் நடந்து வருகின்றன.

கால்பந்து போட்டியை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் வகையில், சூப்பர் கோப்பை போட்டிகள் நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு திட்டமிட்டு வந்தது. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த கூட்டமைப்பின் கூட்டத்தில், 16 அணிகள் பங்கேற்கும் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியை வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஐஎஸ்எல்லில் போட்டியில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகளும், ஐ-லீக்கில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகளும் சூப்பர் கோப்பை போட்டியில் விளையாடும்.
இரண்டு லீக் ஆட்டங்களிலும் மீதமுள்ள தலா 4 அணிகளுக்கு இடையே தகுதிச் சுற்று போட்டி நடத்தி அதில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளும் சூப்பர் கோப்பை போட்டியில் விளையாடும்.
முதல் முறையாக இந்த சூப்பர் கோப்பை போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளது. தற்போது நடந்து வரும் ஐஎஸ்எல் மற்றும் ஐ-லீக் போட்டிகள் முடிந்த உடன் அது துவங்கும்.
முதலில், மார்ச் மாதம் 12 முதல் 31ம் தேதி வரை, தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். மார்ச் 31 முதல், ஏப்ரல் 22 வரை, 16 அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறும். நாக்-அவுட் முறையில் இந்தப் போட்டி நடைபெறும். போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது.
Story first published: Tuesday, February 20, 2018, 13:38 [IST]
Other articles published on Feb 20, 2018


Click it and Unblock the Notifications