சம்மருக்கு முன்னாடி சாக்கர் கிடையாது.. ஓடிப் போங்க எல்லோரும்.. ஸ்பெயின் அமைச்சர் அதிரடி
மாட்ரிட்: கொரோனாவின் தீவரம் இன்னும் குறையவில்லை. எனவே கோடை காலத்திற்கு முன்பு கால்பந்து விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்க வாய்ப்பே இல்லை என்று ஸ்பெயின் நாட்டு விளையாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சால்வடார் இல்லா கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா. இத்தாலியைப் போலவே அதிக பாதிப்பை சந்தித்த ஒரு நாடு ஸ்பெயின். இங்கு இதுவரை 22,000 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு குறையாமலேயே உள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்தாகி விட்டன. குறிப்பாக கால்பந்துப் போட்டிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. மார்ச் 12ம் தேதி முதல் அங்கு கால்பந்து விளையாடப்படவில்லை. மார்ச் 14 முதல் அங்கு லாக்டவுன் அமலில் உள்ளது.

கோடைக்கு முன்பு வாய்ப்பில்லை
இந்த நிலையில் கோடை காலத்திற்கு முன்பு கால்பந்துப் போட்டிகள் தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சர் சால்வடார் இல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோடைகாலத்திற்கு முன்பே கால்பந்துப் போட்டிகள் தொடங்கும் என்று என்னால் சொல்ல முடியாது. காரணம் நிலைமை சரியாகவில்லை. தொடர்ந்து இந்த வைரஸ் பரவலை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இயல்பு நிலை திரும்ப வேண்டும்
நாட்டில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் அதை எப்படி கொண்டு வருவது என்பதில் தீவிர கவனம் தேவைப்படுகிறது. அதை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றார் இல்லா. ஸ்பானிஷ் லீக் போட்டிகள் தற்போது முழுமையாக ரத்தாகியுள்ளன. மே முதல் வாரத்தில் அவை தொடங்க வாய்ப்பில்லை என்றார். மாட்ரிட் மேயரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் செய்ய வேண்டும்
மேலும் கால்பந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இல்லா கூறியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து கிளப்களுக்கும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,அனைத்துத் தரப்பினருக்கும் செய்ததைப் போலவே கால்பந்து வீரர்களுக்கும் இது செய்யப்படவுள்ளதாகவும் இல்லா கூறியுள்ளார்.

எப்போது பயிற்சிகள் தொடங்கும்?
இதற்கிடையே பயிற்சிகள் எப்போது தொடங்கும் என்பதிலும் கிளப்களுக்கிடையே தெளிவு இல்லை. சோதனை செய்யாமல் யாரும் பயிற்சியைத் தொடங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், ஸ்பெயினைப் பொறுத்தவரை கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே அங்கு சோதனை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அங்கு உயிர்ப்பலியும் அதிகமாக உள்ளதாக சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications