ஹாக்கி வீரர்கள் அறிவிப்பு
இந்தியா மற்றும் அர்ஜெண்டினா இடையில் வரும் ஏப்ரல் 11 மற்றும் 12 தேதிகளில் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கென வரும் 31ம் தேதி இந்திய அணி அர்ஜெண்டினாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளில் விளையாடவுள்ள 22 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவுடன் மோதல்
அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் அயர்சில் நடைபெறவுள்ள இந்த எப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகளில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினா அணியுடன் மோதுவதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சி கிடைக்கும் என்று கோச் கிரஹாம் ரெய்ட் தெரிவித்துள்ளார்.
2 பயிற்சி போட்டிகள்
இந்த சுற்றுப்பயணத்தை பயன்படுத்தி இந்திய அணி தன்னை சிறப்பாக மேம்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகளுக்கு முன்னதாக ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரு அணிகளும் இரண்டு வார்ம் அப் போட்டிகளிலும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பயிற்சி போட்டிகளிலும் பங்கேற்று ஆடவுள்ளன.
ஆகாஷ்தீப்பிற்கு ஓய்வு
சொந்த காரணங்களால் கடந்த ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்காத இந்தியாவின் மிட்-பீல்டர் மற்றும் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் கடந்த ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய வீரர்கள் ஆகாஷ்தீப் சிங், ராமன்தீப் சிங் மற்றும் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோருக்கு இந்த பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.