கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் மகளிர் ஹாக்கியில், ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதே போல் ஆடவர் பிரிவிலும் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடித்து, 4-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதி வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது.
மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கும் 21வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. இதில் 220 பேர் கொண்ட இந்தியக் குழு பங்கேற்றுள்ளது. இந்தியா இதுவரை 6 தங்கம் , 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 10 பதக்கங்களை வென்றுள்ளது.
பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் பிரிவுகளில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளதால் அவற்றில் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஆடவர் ஹாக்கி, பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. அதில் 2-2 என டிராவானது.
மகளிர் பிரிவில், ஆசிய சாம்பியனான இந்தியா, ஏ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மலேசியா, வேல்ஸ் அணிகளுடன் உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, கானா ஆகியவை பி பிரிவில் உள்ளன. இந்திய மகளிர் அணி 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இரண்டாவது ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது.
இன்று நடந்த மூன்றாவது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய மகளிர் அசத்தினர். கடந்த காமன்வெல்த் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்திருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, இம்முறை பதக்கம் வெல்வோம் என்று சூளுரைத்து சென்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி 35வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் 48வது நிமிடத்தில் நவ்நீத் கவுர் கோலடிக்க, இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில், இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இதையடுத்து, அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து அணியை முதல் முறையாக இந்திய மகளிர் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா சந்திக்கிறது. இந்த நிலையில் ஆடவர் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடித்து 4-3 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வென்றது இந்திய அணி. இதன் மூலம் அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பை தக்க வைத்தது.