ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தங்கியுள்ள இடத்தில் அவர்களுக்கு உரிய நாற்காலி வசதி கூட செய்து தரப்படவில்லை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் வரும் 5ம் தேதி, ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டு குழுக்கள் ஏற்கனவே, ரியோடி ஜெனிரோவிலுள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு சென்றுள்ளன.
இங்கு இந்திய ஹாக்கி வீரர்கள் தங்கியுள்ள அறை சுத்தமாக பர்னிச்சர்ஸ் ஏதுமின்றி, 'பீன் பேக்குகள்' மட்டுமே போடப்பட்ட இடமாக உள்ளது போட்டோ மூலம் அம்பலமாகியுள்ளது.
ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரீந்திர் பாத்ரா இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ததோடு, இந்திய ஒலிம்பிக் குழு தலைவரான ராகேஷ் குப்தாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
ஹாக்கி இந்தியாவின் இ-மெயில்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி பதில் அளிப்பதில்லை என்றும் நரீந்திர் பத்ரா வேதனை தெரிவித்துள்ளார்.
நீங்கள் எல்லோரும் சுற்றுலாவை கொண்டாட ரியோ டி ஜெனிரோ போயுள்ளீர்களா எனவும், ராகேஷ் குப்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பத்ரா.
நாற்காலி, டேபிள், டிவி செட் எதுவுமே போதிய அளவுக்கு இல்லை என்பது ஒலிம்பிக் வில்லேஜிலிருந்து வரும் புலம்பல் சத்தமாக உள்ளது. எதிரணிகள் ஆடும் போட்டியை லைவாக டிவியில் பார்க்க வேண்டும், அப்போதுதான் இந்திய அணியினர் எதிரணியின் நுணுக்கத்தை உடனுக்குடன் அறிய முடியும். இதற்கான வசதி கூட அங்கு இல்லை என்பதாக ஹாக்கி இந்தியா தலைவர் கோபம் வெளிப்படுத்தியுள்ளார்.