6 மாசமா பணம் தரவில்லை... பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் போர்க்கொடி... ஏஷியாடில் விளையாட மறுப்பு!
இஸ்லாமாபாத்: கடந்த 6 மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய தினப்படி உள்பட எந்தத் தொகையையும் வழங்காததால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி அணி மறுத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் ஹாக்கியில் பி பிரிவில் வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா, ஓமன், இந்தோனேசியா அணிகளுடன் பாகிஸ்தான் உள்ளது.

தற்போது கராச்சியில் பயிற்சியில் இருக்கும் பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக வீரர்களுக்கான தினப்படி உள்பட எந்தப் படியும் வழங்கப்படவில்லை. சராசரியாக ஒரு வீரருக்கு ரூ.8 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர். இந்தத் தொகையை வழங்காவிட்டால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு இருந்த அரசுகள், விளையாட்டுக்கு பெரிய அளவு ஆதரவு ஏதும் தரவில்லை. புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதனால், அவருடைய ஆட்சியில் விளையாட்டுக்கு முக்கியத்தும் கிடைக்கும் என்று நம்புவதாக பாகிஸ்தான் ஹாக்கி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பார்கள் என்றும் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications