ரியோ டி ஜெனிரோ: வீரர்கள் தங்கும் கிராமத்தில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினருக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படததால் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் துவக்க விழாவை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக் திருவிழா நாளை அதிகாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
இந்த முறை கோசாவோ, தெற்கு சூடான் அணிகள் முதன் முறையாக ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்துள்ளதால் ரியோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான துவக்க விழா நிகழ்ச்சி கோலாகமாக நடைபெறவுள்ளது. இதில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் பங்கேற்கவில்லை. பெண்கள் ஹாக்கி அணியினர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, அயர்லாந்துடன் மோதுகிறது. இதனால் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் துவக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஆடை, ஷூ உள்ளிட்டவைகளின் அளவு குறைவாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் வீரர்கள் தங்கும் கிராமத்தில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினருக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படததால் துவக்க விழாவை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் மேனேஜர் ராகேஷ் குப்தா கூறுகையில், துவக்க விழா நிகழ்ச்சியில் நிறைய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இன்று போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டும் ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் ஹாக்கி வீரர்கள் துவக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்தார். இந்த தகவலை விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயலும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா இதுவரை 8 முறை தங்கம் வென்றுள்ளது. அப்படிப்பட்ட இந்திய அணிக்கு இந்த நிலை என விளையாட்டு வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.