மும்பை : புரோ கபடி லீக் தொடரில் ஜூலை 28 அன்று நடந்த லீக் போட்டியில் டபாங் டெல்லி அணி ஹரியானா அணியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி யு மும்பா அணியை வீழ்த்தி அசத்தியது. யு மும்பா அணி தன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது.
முதல் போட்டியில் டபாங் டெல்லி அணி ரெய்டுகளில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது. டெல்லி அணியின் நவீன் குமார் மற்றும் சந்திரன் ரஞ்சித் ரெய்டில் தலா 10 புள்ளிகளுக்கும் மேல் பெற்று, சூப்பர் 10 எடுத்து அசத்தினர்.
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் ரெய்டர் நவீன் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு 9 புள்ளிகள் பெற்றார். அது மட்டுமே அந்த அணியில் குறிப்பிடத்தகுந்த விஷயமாக இருந்தது. முதல் பாதியில் டெல்லி அணி 15 - 10 என முன்னிலையில் இருந்தது. இறுதியில் 41 - 21 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணியை அபாரமாக வீழ்த்தியது டபாங் டெல்லி.
இரண்டாவது போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணியின் பவன் செஹ்ராவத்தின் அசத்தல் ரெய்டுகளின் மூலம் அந்த அணி வெற்றி பெற்றது. முதல் போட்டி ஒரு சார்பாக இருந்த நிலையில், இந்தப் போட்டியில் யாருக்கு வெற்றி என தெரியாத நிலை இருந்ததால் சுவாரசியமாக இருந்தது.
முதல் பாதியில் இரு அணிகளும் மாற்றி மாற்றி புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்று வந்தன. முதல் பாதியின் முடிவில் பெங்களூரு அணி 13 - 11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் யு மும்பா அணி 23 - 22 என முன்னிலை பெற போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், பெங்களூரு அணி 30 - 26 என்ற புள்ளிக் கணக்கில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது. யு மும்பா அணியின் அர்ஜுன் மற்றும் பாஸல் அட்ரச்சலி சிறப்பாக ரெய்டுகள் செய்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.