வரலாறு படைத்த கெர்பர்.. நம்பர் 1 ஆனார்.. செரீனாவை பின்னுக்குத் தள்ளினார்.. யுஎஸ் ஓபனையும் வென்றார்
நியூயார்க்: டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக நாளை முதல் வலம் வரப் போகும் டென்னிஸ் இளம் புயல் ஏஞ்செலிக் கெர்பர், அதற்கு கட்டியம் கூறும் வகையில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
தற்போது உலகின் நம்பர் 2 வீராங்கனையாக வலம் வருகிறார் ஜெர்மனியைச் சேர்ந்த கெர்பர். நாளை முதல் அவர் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக வலம் வரப் போகிறார். செரீனா வில்லியம்ஸ் தனது முதல் நிலையை இழக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் கெர்பர்.
இறுதிப் போட்டியில் செக் வீராங்கனை கரோலினா ப்ளிஸ்கோவாவை அவரப் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றார். கடந்த ஜனவரி மாதம்தான் கெர்பர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். இந்த ஆண்டில் அவருக்குக் கிடைத்துள்ள 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது.

அரை இறுதியில் செரீனாவை சாய்த்தவர்
அமெரிக்க ஓபன் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸை சாய்த்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் கெர்பர். அந்த வெற்றிதான் அவருக்கு முதலிடத்தையும் உறுதி செய்ததாகும். இப்போது பட்டத்தையும் வென்று இரட்டிப்பு சந்தோஷத்துடன் காணப்படுகிறார் கெர்பர்.
எல்லாக் கனவும் நனவானது
இதுகுறித்து கெர்பர் கூறுகையில், எனது அனைத்துக் கனவுகளும் நனவாகி விட்டன. இந்த நிமிடத்தை நான் சந்தோஷமாக அனுபவித்து வருகிறேன். இதை வார்த்தையில் சொல்ல முடியாது. 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இது எனக்கு மிகப் பெரியது என்றார் கெர்பர்.

ஸ்டெபி கிராபுக்குப் பிறகு
ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் இதற்கு முன்பு 1996ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். அவருக்குப் பிறகு ஜெர்மனியைச் சேர்ந்த எந்த வீராங்கனையும் அமெரிக்க ஓபனை வென்றதில்லை. தற்போதைய வெற்றியின் மூலம் அந்த ஏக்கத்தைத் துடைத்திருக்கிறார் கெர்பர்.
ஷாக்கில் செரீனா
இத்தனை காலமாக நம்பர் ஒன் வீராங்கனையாக, அசைக்க முடியாத ராணியாக வலம் வந்த செரீனா வில்லியம்ஸ், அரை இறுதியில் தோற்றதை விட நம்பர் ஒன் பட்டத்தை, அதுவும் தனது சொந்த மண்ணான அமெரிக்காவில் வைத்து இழந்ததை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் இன்னும் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications