உலக கோப்பை வில்வித்தை: மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்! வெள்ளி வாங்கியது ஆடவர் அணி!!
ராக்லா: உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் உட்பட மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளனர். மகளிர் பிரிவில் தீபிகா குமாரி தலைமையிலான அணி தங்கப் பதக்கம் வென்றது.
போலந்து நாட்டின் ராக்லா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இந்தியாவின் தீபிகா குமாரி, பாம்பேலா தேவி, லட்சுமிராணி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, இறுதிச் சுற்றில் மெக்ஸிகோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

தீபிகா அபாரம்!
இந்திய அணியினர் 10 புள்ளிகளை 5 முறை எடுத்தனர். இதில் 3 முறை 10 புள்ளிகளை எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்தீபிகா குமாரி.

ஆடவர் அணி
தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர், அடனு தாஸ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மெக்ஸிகோவிடம் இறுதிச் சுற்றில் 3-5 என தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

கலப்பு இரட்டையர்
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, புவஷா ஷிண்டே ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தீபிகாவுக்கு 3 பதக்கங்கள்
முன்னணி வீராங்கனை தீபிகா குமாரி அணிகள் பிரிவில் தங்கம் வென்றார். அதோடு தனிநபர் பிரிவிலும், ஜெயந்தா தலுக்தருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இதனால், அவருக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன.

ஆசிய போட்டியிலும்..
பதக்கங்களை வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா, இந்த போட்டி அதிக கடினமாக இருக்கவில்லை. ஆசிய போட்டிகளிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications