தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் கேரள விளையாட்டுக் கவுன்சில் தலைவராக நியமனம்
திருவனந்தபுரம்: முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் கேரள மாநில விளையாட்டுக் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியில் இருந்த பத்மினி தாமஸின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைவதையடுத்து அஞ்சு பாபி ஜார்ஜ் விளையாட்டுக் கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சரான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், அஞ்சு பாபி ஜார்ஜ் தகுதியின் அடிப்படியில் மட்டுமே இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அஞ்சு இந்தப்பதவிக்கு பொருத்தமானவர் என்று கருதுகிறேன்.
சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த அஞ்சு ஜார்ஜ், கடந்த 2013-ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற சர்வதேச தடகளப்போட்டியில் கலந்துகொண்டு, பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் 6.70மீ கடந்து உலக சாதனைப் படைத்தார்.
ஒலிம்பிக், காமன்வெல்த் கேம்ஸ், மற்றும் ஆசிய ளையாட்டுப்போட்டிகளில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்த 38 வயதாகும் அஞ்சு ஜார்ஜுக்கு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்மினி தாமஸ் மீண்டும் இதே பதவியில் தொடர வாய்ப்பு தருமாறு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் புதிய தலைவராக முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜை நியமித்து கேரள அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில விளையாட்டுக் கவுன்சில் 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.


Click it and Unblock the Notifications