டெல்லி : நாடு முழுவதும் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
2019ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்த பின், தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். அவர் இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுக்களையும் மேம்படுத்தும் வகையில் ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்தார்.
ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் கேலோ இந்தியா அமைப்பின் கீழ், தேசிய விளையாட்டு கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த புதிய ஆணையம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் விளையாட்டுக்களை பிரபலப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் இது முக்கிய அறிவிப்பாக கருதப்படுகிறது. ஏற்கனவே, இந்தியாவில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சரியான பயிற்சிகள் இந்தியாவில் கிடைப்பதில்லை என்று புகார் கூறி வருகிறார்கள். அதே போல, இளம் வீரர், வீராங்கனைகள் பள்ளி, கல்லூரிகளில் சரியான பயிற்சி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அந்த குறைகளை போக்கும் வகையில் தேசிய விளையாட்டு கல்வி ஆணையம் செயல்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆணையம் எந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும், என்னென்ன பணிகளில் ஈடுபடும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. விரைவில், விளையாட்டு அமைச்சகம் அது குறித்த தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.