தனலட்சுமி
24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, சமீபத்தில் 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர், 100 மீ தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்துள்ளார். குறிப்பாக, சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி சாதனைப்படைத்தார். இதனால் அன்றைய தினத்தின் ஹாட் டாப்பிக்காக தனலட்சுமி மாறினார்.
பி.டி.உஷாவை பின்னுக்கு தள்ளினார்
100 மீ பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கான புகழாரம் ஓய்வதற்குள்ளாக 200 மீ ஓட்டப்பந்தயத்திலும் அவரது கொடி பறந்தது. நேற்று முன் தினம் ( மார்ச் 18) நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன்பு பி.டி.உஷா செய்த சாதனையை தனலட்சுமி முறியடித்தார். 1998 ஃபெடரேஷன் கோப்பையில் பி.டி.உஷா 23.3 நொடிகளில் ஓடி முடித்ததே இன்று வரை சாதனையாக இருந்தது.
வாழ்த்து
இதற்காக பல விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம், தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள். மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும் என பதிவிட்டுள்ளார்.
யார் இவர்
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி. கல்லூரி படிப்பின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் சாதனை புரிந்தவர். 22 வயதே ஆகும் தனலட்சுமிக்கு 2 தங்கைகள் உள்ளனர். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த அவர் வறுமைக்கு இடையேதான் இந்த சாதனைகளை செய்து அசத்தியுள்ளார். இவருக்கு பயிற்சியாளர் மணிகண்டன் உதவிபுரிந்து வருகிறார்.