முதல் பாதியில் 2 கோலடிக்க வாய்ப்பு
முதல் பாதியில் இரண்டு முறை கோல் அடிக்கும் வாய்ப்பு இந்தியா கிடைத்தது. இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்ததால், முதல் பாதி கோல் ஏதும் இல்லாமல் முடிவுக்கு வந்தது.
2வது பாதியில் கொலம்பியா முன்னிலை
இரண்டாவது பாதியில் 49வது நிமிடத்தில், பெனலோசா கோலடிக்க, கொலம்பியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. எதற்கும் மனந்தளறாத மன்னர் விக்கிரமாதித்தன்போல, இந்திய ஜூனியர்கள் விளையாடியது, போட்டியை பார்த்தவர்களை பரவசமடைய வைத்தது.
இந்திய ஜூனியர்களின் கலக்கல்
மிக வலுவான அணிக்கு எதிராக விளையாடும் எந்த பதற்றமும், பயமும் இல்லாத இளங்கன்றுகள், முட்டி மோதின. 82வது நிமிடத்தில் ஜியாக்சன் சிங், தரையில் இருந்து மேலே எழும்பி தலையால் முட்டி கோலடித்தார்.
உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் கோல் என்ற வரலாறு படைத்த அந்த மகிழ்ச்சி அடங்க சிறிது நேரமாயிற்று.
2வது கோலை அடித்த கொலம்பியா
அடுத்த ஒரு நிமிடத்தில் பெனலோசா மீண்டும் கோலடிக்க, கொலம்பிய 2-1 என்று முன்னிலை பெற்றது. அதன்பிறகு கோலடிக்கும் வாய்ப்பு இரு
அணிகளுக்கும் கிடைக்கவில்லை.
தோற்றாலும் கோலடித்த சாதனை
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் இந்தியாவின் முதல் கோல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை. வரும் 12 ம்தேதி டெல்லியில் கானாவை இந்தியா சந்திக்கிறது.
ஏ பிரிவில் அமெரிக்கா வெற்றி
நேற்று இரவு நடந்த ஏ பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா 1-0 என கானாவை வென்றது. பி பிரிவில் மாலி 3-0 என துருக்கியையும், பராகுவே 4-2 என நியூசிலாந்தையும் வென்றன. இன்று நடக்கும் போட்டிகளில் சி பிரிவில் கோஸ்டாரிகா- குய்னா, ஈரான் - ஜெர்மனி மோதுகின்றன. டி பிரிவுில் ஸ்பெயின் - நைஜர், வடகொரியா - பிரேசில் விளையாடுகின்றன.