முதல் டெஸ்ட் : 244 ரன்னில் தெ.ஆ. ஆல் அவுட் - 'லீட்' எடுத்தது இந்தியா - இஷாந்த், ஜாகீர் அபாரம்!
ஜோகன்னஸ்பெர்க்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 244 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் இஷாந்த் சர்மா, ஜாகீர்ஹான் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நியூவான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி சதம் விளாசினார். கேப்டன் டோணி 17 ரன்களுடனும், ரஹானே 43 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி ஒரு மணி நேரத்திற்குள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. வெரோன் பிலாண்டர், மோர்னே மோர்கலின் புயல்வேகத்தையும், ஸ்விங் தாக்குதலையும் இந்திய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்
பின்னர் தென்னாப்பிரிக்கா கேப்டன் சுமித்தும், பீட்டர்சனும் இன்னிங்சை தொடங்கினர்.

இந்திய பந்துவீச்சு செம
வேகத்துக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய பவுலர்களும் சரமாரியான தாக்குதல் தொடுத்தனர். இஷாந்த் ஷர்மா, ஓவருக்கு இரண்டு பவுன்ஸ் வீதம் வீசி மிரட்டினார். பீட்டர்சன் 21 ரன்களில் இஷாந்தின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

நிலைத்து ஆடிய அம்லா-சுமித் ஜோடி
அடுத்து ஹஷிம் அம்லா சுமித்துடன் கைகோர்த்தார். சுமித் 19 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை அஸ்வின் தவற விட்டார். இதன் பின்னர் இந்த ஜோடியை பிரிக்க ரொம்ப சிரமப்பட வேண்டி இருந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா சரிவில் இருந்து மீண்டதுடன் 100 ரன்களையும் கடந்தது.

மிரட்டிய இஷாந்த்
2-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை இஷாந்த் ஷர்மா பிரித்தார். அவரது பந்தில் அம்லா எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த காலிஸ் முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார்.

விடாது கருப்பு ஜாகீர்
அடுத்த ஓவரில் சுமித்தை ஜாகீர்கான் காலி செய்தார்.

சும்மா இருப்பாரா ஷமி?
இதைத் தொடர்ந்து "சூறாவளி' முகமது ஷமி தனது பங்குக்கு டுமினி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரை வெளியேற்றினார். ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 130 ரன்களுடன் இருந்த தென்னாப்பிரிக்கா அடுத்த 16 ரன் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்து போனது. இதனால் இந்திய அணியின் கை ஓங்கியது.

ஆட்ட முடிவில்
தென்னாப்பிரிக்கா அணி நேற்றை ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

2வது நாள் ஆட்டம்
இன்றும் இந்திய அணியின் பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் நிலை குலைந்து போயினர். 244 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது தென்னாப்பிரிக்கா.

இஷாந்த், ஜாகீர் தலா 4
இந்திய அணியின் இஷாந்ஹ்த் சர்மா, ஜாகீர்கான் தலா 4 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

36 ரன்கள் கூடுதல்
தென்னாப்பிரிக்கா அணியைவிட இந்திய அணி 36 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications