சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகள் காண்போர் மனதை கவர்ந்தது.
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
சென்னை நேரு உள் அரங்கத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பாடல் இடம்பெற்றது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருந்தது. இதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட்டிற்காக வருகை தந்த அனைத்து நாட்டினரும், தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்.
கொடி அணிவகுப்பிற்கு பிறகு இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரைசாற்றும் விதமாக கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நடன நிகழ்ச்சியில் 8 மாநிலங்களின் கலாச்சார நடனங்கள் அரங்கேறின. அதன்படி உத்தரப் பிரதேசத்தின் கதக், மணிப்பூர் மணிப்பூரி, அசாமின் சத்ரியா, ஒடிசாவின் ஒடிசி, ஆந்திர குச்சிப்புடி, கேரள மோகினி, கதகளி, தமிழகத்தின் பரதநாட்டியம் ஆகியவை அரங்கேறியது.
இதனை கண்ட அயல்நாட்டு வீரர், வீராங்கனைகள் இந்தியாவின் பெருமையை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். இதுமட்டுமின்றி லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி, மணல் ஓவியம் போன்ற நிகழ்ச்சிகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.