41 ஆண்டுகளுக்கு பிறகு
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி அணி செமி ஃபைனல் வரை முன்னேறியதே மிகப்பெரும் சாதனை எனலாம். 49 வருடங்களுக்கு பின் செமி ஃபைனல் போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசியாக 1972 ஒலிம்பிக் செமி ஃபைனலில் இந்தியா ஆடியது. அதன்பின் இந்த ஒலிம்பிக்கில் தான் இந்தியா அரையிறுதி வரை சென்றது. இதில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்க போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தியது. இந்த வெண்கலம், 41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஹாக்கி மூலம் கிடைத்த முதல் பதக்கமாகும். கடைசியாக ரஷ்யாவில் 1980ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில், இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதன் பிறகு, இப்போது தான் இந்திய அணி பதக்கம் வென்றிருக்கிறது. அதேபோல், இந்திய மகளிர் ஹாக்கி அணியும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறி சரித்திரம் படைத்தது.
கோல் கீப்பர்
இந்த வெற்றிகளுக்கும், ஹாக்கி அணியின் முன்னேற்றத்திற்கும் மிக முக்கிய நபராக பார்க்கப்படுபவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். காரணம், ஹாக்கி மீது அவருக்கு இருக்கும் அளவற்ற நேசமே. முதல்வர் நவீன் பட்நாயக் தனது பள்ளிப் பருவ காலத்தில், ஹாக்கி அணியின் கோல் கீப்பராக இருந்தவர். அப்போது இந்த விளையாட்டின் மீது துவங்கிய காதல், இன்னமும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
முன்வந்த முதல்வர்
சஹாரான்னு ஒரு நிறுவனம் உள்ளது. கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சச்சின், கங்குலி காலத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் இந்த நிறுவனம் தான். இவர்கள் தான் இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சராகவும் இருந்தனர். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு இந்த நிறுவனம் இந்திய ஹாக்கி அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. அப்போது திக்கற்று நின்ற ஹாக்கி அணியை, தாமே முன்வந்து 'இந்திய ஹாக்கி அணிக்கான மொத்த செலவுகளையும் இனி எனது ஒடிசா அரசு பார்த்துக் கொள்ளும்' என்று தடாலடியாக அறிவித்தார் முதல்வர் நவீன் பட்நாயக்.
370 கோடி
அதுமட்டுமின்றி, ஒரு புதிய ஒப்பந்தம் ஒன்றையும் உருவாக்கி அதில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, ஹாக்கி விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், மைதானங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக 5 ஆண்டுகளுக்கு 120 கோடி ரூபாயை ஒதுக்கியது ஒடிசா அரசு. இந்த 120 கோடியைத் தவிர, விளையாட்டுத்துறைக்காக ஒவ்வொரு வருடமும் ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையிலிருந்து ஹாக்கி விளையாட்டுக்காகவும் ஒடிசா அரசு செலவு செய்து வருகிறது. ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், கல்வி உள்ளிட்டவற்றுக்கான செலவுகளுக்காக விளையாட்டு பட்ஜெட்டிலிருந்து ஒரு பகுதி பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட்ட கடந்த ஆண்டு 265 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 370 கோடி ரூபாயாக ஒடிசா அரசு உயர்த்தியிருக்கிறது.
சலசலப்பு
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் துணை கேப்டனும், ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டனும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள்தான். தற்போது ஒடிசாவின் ரூர்கேலா பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில் ஹாக்கி மைதானம் ஒன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. 2023-ல் மீண்டும் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவதற்காக இந்த மைதானத்தைத் அற்புதமாக ஒடிசா அரசு தயார் செய்து வருகிறது. இப்படி ஹாக்கி விளையாட்டிற்காக முதல்வர் நவீன் பட்நாயக் அதிக சிரத்தை எடுத்து வருகிறார். அதன் வெளிப்பாடே, ஒலிம்பிக் வரலாற்றில், 41 ஆண்டுகளுக்கு மெடல் வென்று திரும்பியிருக்கிறது, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. பெண்கள் அணி தோற்றாலும், அரையிறுதி வரை முன்னேறி நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது. இந்த அத்தனை மேஜிக்களுக்கும் சொந்தக்காரர் முதல்வர் நவீன் பட்நாயக் மட்டுமே. ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பு என்னவெனில், இதுவரை இந்திய ஹாக்கி அணி முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்திக்கவில்லை என்பதே.
Recommended Video
சமூக தளங்களில் விவாதம்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் சரி, இந்திய பெண்கள் ஹாக்கி அணியும் சரி.. இதுவரையில் முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து நன்றியை தெரிவிக்கவில்லை என்ற கருத்து சலசலப்பாக உருவடுத்து வருகிறது. முதல்வரை சந்திக்க வேண்டுமெனில், தகுந்த கால நேரம் பார்த்து, அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி சந்திக்க வேண்டும் என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஹாக்கி விளையாட்டுக்காக இத்தனை காதல் கொண்டிருக்கும் முதல்வர், எப்படி மெடல் வென்று வந்த இந்திய ஒலிம்பிக் படையை பார்க்காமல் தவிர்ப்பார்? என்று ஹாக்கி அணிகளின் மீது விமர்சனம் வைக்கும் ரீதியாக சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.