ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வரும் இந்தோனேசிய அரங்கங்களில் டிக்கெட்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் இந்தோனேசிய மக்கள் கோபமடைந்து உள்ளனர். அதே போல, ஆசிய போட்டிகளை காண வந்த வெளிநாட்டு ரசிகர்களும் அவதி அடைந்து இருக்கிறார்கள்.
இதனால், பல ரசிகர்கள் கோபத்தில் கூச்சலிட்டுக் கொண்டு இருந்ததாக இந்தோனேசியாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆன்லைனில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகத் தான் மக்கள் நேரடியாக டிக்கெட் வாங்க குவிந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நேரம் வரிசையில் நின்று இருந்த ரசிகர்கள் டிக்கெட் கவுண்டர் அருகில் செல்லும் போது அவர்கள் காண விரும்பிய விளையாட்டுகளுக்கு டிக்கெட்கள் தீர்ந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு கியோஸ்டிக்ஸ் (KIOSTIX) என்ற இணையதள விற்பனை முறையில் இருந்த போது, அந்த தளம் அதிக பார்வையாளர்களை ஏற்க முடியாமல் செயலிழந்து போயுள்ளது.
இதனால், பிலிப்லி (BLIBLI) என்ற விற்பனை தளத்துக்கு ஒருங்கிணைந்த விற்பனை முறையில் டிக்கெட் விற்பனை மாற்றப்பட்டது. இதையடுத்து, நேரடி டிக்கெட் விற்பனை முறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது பற்றி ஒரு இந்தோனேசிய ரசிகர் கூறுகையில், "இங்கே வரிசையில் இந்தோனேசியர்கள் மட்டும் இல்லை, வெளிநாட்டுக்காரர்களும் இருக்கிறார்கள். எங்களை (இந்தோனேசியாவை) அவமானப்படுத்தாதீர்கள். அதிக கவுண்டர் திறந்து வையுங்கள்" என கோபமாக கூறினார்.
சிலர் வரிசையில் நிற்கும் ரசிகர்களிடம் இரண்டு மடங்கு விலைக்கு டிக்கெட்களை விற்று வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்டப்படுமா என தெரியவில்லை.