நியூடெல்லி : இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் மகளிர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம் தன் ஆறாவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் மேரி கோம், அந்த போட்டியில் உக்ரைன் நாட்டின் ஹன்னா ஒக்ஹோடாவை சந்தித்தார்.

இந்த போட்டியில் ஹன்னாவை 5-0 என எளிதான வெற்றியை பெற்றார். எதிராளியை விட சிறப்பாக ஆடிய மேரி கோம் தன் ஆறாவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்தார்.
இந்த 6வது சாம்பியன்ஷிப் பட்டத்தின் மூலம் மேரி கோம் கியூபாவின் பிரபல குத்துச்சண்டை வீரர் பெலிக்ஸ் சவானின் சாதனையை சமன் செய்துள்ளார். சவானும் ஆறு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மகளிர் பிரிவில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் செய்துள்ளார்.
வெற்றிக்கு பின் பேசிய தங்க மங்கை மேரி கோம் இந்த சாதனை வெற்றியை நாட்டுக்கு சமர்பிப்பதாக கூறினார். குத்துச்சண்டையில் இந்தியாவின் பெருமையை உலகளவில் பிரபலமாக்கியவர் மேரி கோம் தான். தன் முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை தன் 19 வயதில் வென்ற அவர், தற்போது 35 வயதில் தன் ஆறாவது தங்கத்தை வென்று ஆச்சரியம் அளிக்கிறார்.