போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராமேஸ்வர் சிங் என்ற இளைஞர், அதி வேகமாக 100மீ தூரத்தை 11 விநாடிகளில் கடந்து, முதலமைச்சர், மத்திய அமைச்சர் என அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷிவ்ராஜ் சிங் சவுகான் தமது ட்விட்டரில் ஒரு அரிய மனிதரின் அபரிமிதமான சாதனை ஒன்றை பதிவிட்டிருந்தார். இதை அடுத்து, அந்த மனிதரை நாடே உற்று நோக்கியது. காரணம் ஷிவ்ராஜ் சிங் பதிவிட்ட வீடியோ ஒன்று, ஒரு திறமை மிகுந்த, எழுச்சிமிக்க ஒரு ஓட்டப்பந்தய வீரரின் சாதனையை கண்முன் நிறுத்தியது.

அந்த வீடியோவில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராமேஸ்வர் சிங் என்கிற 19 வயது இளைஞர் 11 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடக்கிறார். அந்த வீடியோவை வைத்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவுக்கு ஷிவ்ராஜ் சிங் கோரிக்கை வைத்தார்.
அதைப் பார்த்த கிரன் ரிஜூஜூ, அந்த பையனை யாரேனும் அழைத்து வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். 19 வயதேயான ராமேஸ்வர் சிங் ஓடுவதற்கும், தடகள பயிற்சிக்கும் அதற்கான மையத்தில் சேர்க்க உதவி இருக்கிறார்.
இந்த சம்பவம் இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எளிய மனிதர்களின் திறமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படும் என்றும், அதற்கு இது போன்ற நிகழ்வுகள் ஒரு முன்மாதிரி என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கின்றனர்.