உடல்நலக்குறைவு
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளில் ஹரியானாவை சோனம் மாலிக்கும் ஒருவர். 19 வயதே ஆகும் இவர் வறுமை, குடும்ப கஷ்டங்களை தாண்டி மிகப்பெரும் பிரச்னையில் இருந்து மீண்டு தற்போது ஒலிம்பிக்கிற்கான தனது வாசலை திறந்துள்ளார். சிறுவயதில் இருந்தே மல்யுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த சோனமிற்கு கடந்த 2017ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில் அவருக்கு இடதுகை செயலிழந்து போனது.
தன்னம்பிக்கை நாயகி
தனது கையை ஒரு விநாடி கூட அவரால் தூக்க முடியவில்லை. அவரின் விளையாட்டு எதிர்காலம் அவ்வளவுதான் என அனைவரும் நினைத்த நிலையில் விடாப்பிடியான போராட்டத்தால் 6 மாதங்களில் குணமடைந்து போட்டிக்கு திரும்பினார். இதுகுறித்து பேசிய அவரின் தந்தை ராஜேந்தர் மாலிக், எனக்கு வருமானம் மிக குறைவு என்பதால் சோனமை பெரிய மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஆயுர்வேத சிகிச்சை தான் கொடுத்தேன். ஆனால் கடவுளின் அருளால் 6 மாதங்களில் எனது மகள் மீண்டாள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
குவிந்த பதக்கங்கள்
2018ம் ஆண்டு மீண்டும் ரிங்கிற்குள் காலடி எடுத்து வைத்த சோனம் மாலிக், ஏசியன் கேடட் தொடரில் வெண்கல பதக்கம் வென்றார். அதற்கு அடுத்து கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற உலக கேடெட் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தினார். அதன் பிறகு 2020ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு காரணம் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீராங்கனையான சாக்ஷி மாலிக்கை வீழ்த்தியது தான்.
ஒலிம்பிக் கனவு
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த சோனம் மாலிக் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் 63 கிலோ பிரிவில் இடம்பெற்றுள்ளார். இவர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தனது ஒலிம்பிக் ரிங்கிற்குள் காலடி எடுத்து வைக்கவுள்ளார். அனைத்து மருத்துவர்களும் சோமனின் ஒலிம்பிக் கனவு தகர்ந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் அவர் அதனை வென்று காட்டியுள்ளது பல இளைஞர்களுக்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.