மாபெரும் விருந்து
இந்த நிலையில் தான் நாளை (ஜுலை 30) ஒரு அட்டகாசமான ஆட்டம் நடைபெறவிருக்கிறது. ஆம்! பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே யாமகுச்சியை (Akane Yamaguchi) எதிர்கொள்கிறார். ஆமாங்க! உலகின் நான்காம் நிலை வீராங்கனையான அதே யாமகுச்சியை தான் எதிர்கொள்கிறார். "both the shuttlers were killing each other" என்று வர்ணனையில் சொல்லும் அளவுக்கு ஆக்ரோஷமாக இருவரும் மோதிக் கொள்ளும் ஆட்டம் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.
தங்கமா? வெள்ளியா?
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இந்தியாவுக்கு மெடல் வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கை பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி,.சிந்து. எதிர்பார்த்தது போலவே லீக் போட்டிகளில் வென்று, தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் ஏதாவது ஒரு மெடலை உறுதி செய்ய, இன்னும் ஒரு ஆட்டமே மீதமுள்ளது. அந்த மெடல் தங்கமா, வெள்ளியா, வெண்கலமா என்பது பின்னர் தெரிய வரும்.
அன்று காலிறுதி தான்
இந்த நிலையில் தான் சிந்து - யாமகுச்சி ஆகியோர் நாளை நேருக்கு நேர் மல்லுக்கட்டுகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த All England Championships 2021 தொடரின் காலிறுதிப் போட்டியிலும் இதே சிந்து - யாமகுச்சி மோதினர். அவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு ஆக்ரோஷம். அத்தனை வேகம். இருவரது ஆட்டத்திலும், முடிவில், 16-21, 21-16, 21-19 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சிந்து.
பெரிய சம்பவம் ரெடி
இவர்களது ஆக்ரோஷமான மோதலால், ஆட்டம் ஒருமணி நேரத்தையும் கடந்து செல்ல, இதனைப் பார்த்த முன்னாள் பேட்மிண்டன் ஜாம்பவானும், வர்ணனையாளருமான மோர்டன் ஃப்ரோஸ்ட், "both the shuttlers were killing each other" என்று சிலாகித்தார். அப்படியொரு அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் நாளை மீண்டும் ஒலிம்பிக் காலிறுதியில் மோதவிருக்கின்றனர். ஏதோ ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கு!