ஜகார்த்தா : கடந்த ஆகஸ்ட் 18 துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவை எட்டியுள்ளன. இன்று செப்டம்பர் 2 அன்று அனைத்து போட்டிகளும் முடிவடைந்து நிறைவு விழா நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் அனைத்து நாடுகளும் கொடி ஏந்தி செல்ல வேண்டும். இந்தியா சார்பில் மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கொடி ஏந்தி முன்னே செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் பத்ரா இதை தெரிவித்துள்ளார். அவர்தான் உலக ஹாக்கி அமைப்பிற்கும் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஹாக்கி அணி இந்த முறை தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், வெள்ளி மட்டுமே வென்றது. இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியிடம் 1-2 என தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணி, தங்கத்தை நழுவ விட்டது. எனினும், 20 ஆண்டுகள் கழித்து மகளிர் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டு இறுதியில் ஆடியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டின் துவக்க விழாவில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி பவனி வந்தார். அவர் இந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். இந்திய வீரர்கள் பலர் தங்கள் போட்டிகள் நிறைவு அடைந்ததும் நாட்டுக்கு திரும்பி விட்டதால், இந்தோனேசியாவில் தற்போது தங்கி இருக்கும் வீரர்களைக் கொண்டே நிறைவு விழாவில் கொடி ஏந்தச் செய்ய முடியும். அந்த வகையில் மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் இந்த வாய்ப்பை பெற்று இருக்கிறார்.
இந்தியா இந்த ஆசிய விளையாட்டில் 15 தங்கம் உட்பட 69 பதக்கங்கள் பெற்று ஆசிய விளையாட்டு வரலாற்றில் தன் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது.