லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 13 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. இதற்காக 81 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இந்திய டென்னிஸ் அணி லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்சா, ருஷ்மி சக்ரவர்த்தி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் களமிறங்குகிறது. இருப்பினும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய டென்னிஸ் அணிக்கு பதக்கம் கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதற்காக எங்களின் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த உள்ளோம். ஆனால் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
ஒலிம்பிக் போட்டியில் அனைத்து வீரர்களும், வீராங்கனைகளும் கடும் நெருக்கடியுடன் பங்கேற்கின்றனர். இதனால் நமக்கு எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றார்.
இது குறித்து இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன் கூறியதாவது,
இந்தியாவிற்கு எத்தனை ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைக்கும் என்பது குறித்து நான் இப்போது எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அதிகளவிலான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 50 வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே தகுதி பெற்றனர். ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 81 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டுத் துறை அமைச்சரும் ஒரு விளையாட்டு வீரராகவே இருப்பார் என்று நினைக்கிறேன். இந்த முறை என்னை உடன் 10 பேர் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறோம். ஆனால் இதில் நான் மட்டும் விளையாட்டு வீரர் அல்ல.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் தகுதிப் பெறாமல் இருந்த இந்திய ஹாக்கி அணி, இந்த முறை தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய ஹாக்கி அணியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.