டெல்லி: தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் இந்திய ரசிகர்களுக்கு பட்டாசு கொடுக்கும் விளம்பரத்திற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தினால் வெடிக்கலாம் என்று நினைத்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் 1992ம் ஆண்டு வாங்கிய பட்டாசுகள் கொண்ட அட்டைப்பெட்டி பரண் மேல் இருப்பது போன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பானது. உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை ஒரு முறை கூட வென்றது இல்லை என்பதை குறிப்பிட்டு இந்த விளம்பரம் வெளியானது.
இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை இந்தியா ஒரு முறை கூட வென்றது இல்லை என்பதை குறிக்க தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இருவர் இந்திய ரசிகர்களிடம் பட்டாசுகள் அடங்கிய அட்டைப்பெட்டியை அளிக்கும் விளம்பரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பியது.
இந்த விளம்பரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், இந்திய ரசிகர்கள் வீட்டில் அமர்ந்து டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்க்கிறார்கள். அப்போது அழைப்பு மணி அடிக்கும் சப்தம் கேட்டு கதவை திறந்தால் வாசலில் தென்னாப்பிரிக்க அணியின் சீருடையில் நிற்கும் இருவர் இந்திய ரசிகரிடம் பட்டாசுப் பெட்டியை அளித்துவிட்டு மோக்கா மோக்கா என்று கிண்டல் செய்துவிட்டு கிளம்புகிறார்கள்.
அவர்களை இந்திய ரசிகர் அழைத்து வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது எடுத்த புகைப்படத்தை காண்பித்து பட்டாசு பெட்டியை அவர்களிடமே கொடுக்கிறார். பின்னர் அவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து மோக்கா மோக்கா என்று கூறுகிறார்கள்.
அதாவது தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்காவிட்டாலும் உலகக் கோப்பையை வென்றது நாங்கள் தான் என்பதை இந்திய ரசிகர்கள் இந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.