மேலும் ஒரு ஏமாற்றம்
பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதலில் 50மீ ரைஃபில் பிரிவின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான அன்ஜும் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சுவாரஸ்யமாக சென்ற இந்த போட்டியில் அன்ஜும் 15வது இடத்தையும், தேஜஸ்வினி 33வது இடத்தையும் பிடித்தனர். இப்பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இருவரும் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.
ஆட்டத்தின் விதிமுறை
இந்த போட்டியில் ஒவ்வொரு துப்பாக்கி சுடும் வீராங்கனைகளுக்கு மொத்தம் 3 பொஷிஷன்களில் 4 தொடர்களாக நடத்தப்படும். ஒவ்வொரு பொஷிஷனிலும் மொத்தம் 10 ஷாட்கள் வாய்ப்பு கொடுக்கப்படும். அந்தவகையில் மொத்தமுள்ள 120 புள்ளிகளில் எத்தனை புள்ளிகளை எடுக்கின்றார்களோ அதனை வைத்து தான் அடுத்த போட்டிக்கு முன்னேற முடியும்.
தகுதிச்சுற்று
இந்த தகுதிச்சுற்று போட்டி நடைபெற்ற டோக்கியோவின் அசாகா சூட்டிங் மையம், இந்திய வீரர்களுக்கு சற்று கடினமான ஒன்றாகும். இது இந்திய வீராங்கனைகள் பெரும் சறுக்கலாக இருந்தது. நீளிங் மற்றும் ப்ரோன் பொஷிஷன் சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய அன்ஜும் மௌத்கில் ஸ்டாண்டிங் பொஷிஷனில் சொதப்பினார். இதனால் மௌத்கில் நீலிங் முறையில் 99, 98, 96, 97 (390), ப்ரோன் முறையில் 98, 100, 98, 99 (395), ஸ்டேண்டிங் 94, 96, 95, 97 (382) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1167-54x புள்ளிகளுடன் 15-வது இடம் பிடித்தார்.
தேஜஸ்வினி விவரம்
இதே போல மற்றொரு வீராங்கனையான தேஜஸ்வினி சாவந்த் நீளிங் ரவுண்ட் மற்றும் ப்ரோன் ரவுண்டில் மிக மோசமாக திணறினார். இதனால் இந்த போட்டியில் நீலிங் முறையில் 97, 92, 98, 97 (384), ப்ரோன் முறையில் 99, 98, 99, 98 (394), ஸ்டேண்டிங் 94, 93, 95, 94 (376) புள்ளிகள் பெற்றார். மொத்தமாக 1154-50X புள்ளிகளுடன் 33-வது இடம் பிடித்து வெளியேறினார்.
மிகப்பெரும் அணி
டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் துப்பாக்கி சுடுதலில் 15 பேர் பங்கேற்றனர். இது மிகப்பெரும் பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பதக்கம் வரை கூட ஒருவரும் செல்லாமல் உள்ளது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்தியாவின் மேராஜ் அகமது கான், அபுர்வி சண்டேலா, தீபக் குமார், அபிஷேக் வர்மா ராஹி சர்னோபத் ஆகிய அனுபவ வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர். இளம் சாதனையாளர்களாக பார்க்கப்பட்ட மனு பாக்கர், சவுரவ் சவுத்ரி, திவ்யான்ஷ் சிங் பவார், ஐஸ்வர்யா பிரதாப் சிங் மற்றும் யஷஸ்வினி தேஸ்வால் ஆகியோரும் பதக்கமின்றி வெளியேறியுள்ளனர். இதனால் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் இருந்து இந்திய மகளிர் அணியினர் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.
கடைசி வீரர்
ஆடவர் அணியில் மட்டும் ஒரே ஒரு நம்பிக்கை உள்ளது. ஆடவருக்கான 50மீட்டர் ரைஃபில் பிரிவு தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் சஞ்சீவ் ராஜ்புத், ஐஸ்வர்யா பிரதாப் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சார்பில் சவுரப் சவுத்திரி மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இறுதிப்போட்டிக்கு நுழைந்து வெற்றி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.