கொரோனா பரவல்
டோக்கியோவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடும் பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும் ஒலிம்பிக் வீரர்கள், அதிகாரிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போட்டிகள் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போராட்டக்குழு
இது ஒருபுறம் இருக்க, ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக்கூடாது என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டோக்கியோ நகரம் முழுவதும் கொரோனாவினால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. இந்த சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் தேவைதானா என அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
ரத்து செய்யப்படலாம்
இந்நிலையில் இதுகுறித்த சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட ஒலிம்பிக் போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கொரோனா பரவல் அதிகரித்தால் கடைசி நேரத்தில் போட்டிகளை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மூட்டோ, கடைசி நேரத்தில் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது எனக்கூறியுள்ளார்.
ஆலோசனை
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஒலிம்பிக் குழு அதிகாரிகள் உற்று கவனித்து வருகிறோம். தேவை ஏற்பட்டால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என விவாதிப்போம். ஆனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை இப்போதே முன்னறிந்து கூற முடியாது என அவர் கூறியுள்ளார்.