பாதுகாப்பு முறை
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் டோக்கியோ நகரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நகரம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பல கட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வீரர் மாயம்
இந்நிலையில் உகாண்டா நாட்டை சேர்ந்த பளு தூக்கு வீரரான ஜூலியஸ் ஷெகிடோலேகோ திடீரென மாயமாகியுள்ளார். கொரோனா பரிசோதனை செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இசுமிசானோ நகரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அவர் கொரோனா பரிசோதனைக்கு பயந்து திடீரென மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன வருத்தம்
உகாண்டா நாட்டில் இருந்து ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்காக 9 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ சென்றிருந்தனர். அதில் 20 வயதாகும் ஜூலியஸும் ஒருவர் ஆவார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் ஒலிம்பிக் போட்டிக்கு இட ஒதுக்கீடு முறையில் தகுதிபெறவில்லை. இதன் காரணமாக வரும் ஜூலை 20ம் தேதி நாடு திரும்பவிருந்தார். எனினும் ஜூலியஸ், தான் சிறிது காலம் ஜப்பானில் இருக்க விரும்புவதாக கூறிவிட்டதாக தெரிகிறது.
கொரோனா தான் காரணமா
இந்த ஒலிம்பிக் போட்டியில் உகாண்டா நாட்டு விரர்களுக்கு தொடர்ந்து சிக்கல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்நாட்டு வீரர் ஒருவருக்கு விமான நிலையத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது நடைபெற்ற அடுத்த சில நாட்களில் மேலும் ஒரு உகாண்டா வீரருக்கு கொரோனா உறுதியானது. எனவே தனக்கும் கொரோனா உறுதியாகிவிடுமா என்ற அச்சத்தில் ஜூலியஸ் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.