டெல்லி: ஒட்டு மொத்த இந்தியர்களையும் வருத்தப்பட வைத்துள்ளனர் லியாண்டர் பயஸும், ரோஹன் போபண்ணாவும். இந்தியாவுக்காக ஆடுகிறோம் என்று சொல்லக் கூட இவர்களுக்கு அருகதை இல்லை. இவர்களின் தனிப்பட்ட ஈகோ பிரச்சினையால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கேவலப்படுத்தியுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
யார் பெரியவர் என்ற சண்டை, தேவையில்லாத ஆணவம், வீம்பு என்று முரண்பாடுகளின் மொத்த உருவாகமாக இருவரும் முறுக்கிக் கொண்டதன் விளைவு இன்று இந்தியாவுக்கு முதல் சுற்றிலேயே தோல்வி கிடைத்துள்ளது.
இருவரும் முறையாக ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகவில்லை. இருவருமே இணைந்து பயிற்சி எடுக்கவில்லை. பிரேசிலுக்கு போபண்ணா முன்கூட்டியே போய் விட்டார். ஆனால் அவருடன் இணைந்து பயிற்சி பெற லியாண்டர் இல்லை. அவர் லேட்டாகத்தான் வந்தார். இதனால் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து பயற்சி எடுத்தார் போபண்ணா.
இதை விட முக்கியமாக ஒலிம்பிக்கில் இரட்டையர் போட்டியில் லியாண்டருடன் இணைந்து ஆட முடியாது என்று பிடிவாதமாக இருந்து வந்தார் போபண்ணா. தன்னை விட வயதில் இளையவரான சாகேத் மைனெனியுடன் இணைந்து ஆடவே அவர் விரும்பினார். ஆனால் அவருக்குப் பதில் 43 வயதான லியாண்டருடன் இணைந்து விளையாடுமாறு போபண்ணாவைப் பணித்தது.
கடைசியில் ரியோவுக்கு வந்த பிறகும் இவர்களின் சண்டை தொடர்ந்தது. போபண்ணாவுடன் தங்க லியாண்டர் மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவருக்கு ரூம் கூட கிடைக்கவில்லை.
மொத்தத்தில் இருவரும் சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்களே தவிர இணைந்து ஆடி இந்தியாவுக்கு ஒரு பத்தக்கத்தைப் பெற வேண்டும் என்று ஒரு விநாடி கூட நினைத்துப் பார்த்ததாகவே தெரியவில்லை.
இந்த்த தோல்வியோடு லியாண்டர் பயஸின் ஒலிம்பிக் பயணம் முடிந்து போனது. இது அவருக்கு 7வது ஒலிம்பிக் போட்டியாகும். 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். ஆனால் இந்த ஒலிம்பிக்கில் அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் கிடைத்தது மிகப் பெரிய ஏமாற்றம் மட்டுமே.
ரோஹன் போபண்ணாவுக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. சானியா மிர்ஸாவுடன் அவர் கலப்பு இரட்டையர் போட்டியில் மோதுகிறார். அதிலாவது நமக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
தேவையில்லாத ஈகோவால் இந்தியாவுக்கு இன்று ரியோவில் மிகப் பெரிய ஏமாற்றம் கிடைத்து விட்டது. இதற்கு லியாண்டரும், போபண்ணாவும் என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?