சுகாதார பணியாளர்கள் தான் இப்போ சாம்பியன்ஸ்... நம்மள சுத்தி அவங்க நிறைய பேரு இருக்காங்க...
பாட்மிங்கென் : சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தன்னுடைய தாக்குதலை நடத்திவரும் நிலையில், விளையாட்டு உலகம் அந்த ஸ்தம்பிப்பு நிலையிலும் தனது உறுதியை விடாமல் இறுக்கப் பிடித்துக் கொண்டுள்ளது. அந்த வகையில் டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
எட்டு முறை விம்பிள்டன் சாம்பியன் ஆன ரோஜர் பெடரர் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்காக இந்த வீடியோவில் பேசியுள்ளார். அனைவரும் இந்த கோடைகாலத்தில் நாம் காணப்போகும் புதிய சாம்பியனுக்காக உற்சாகக் குரல் கொடுக்குமாறும் அதில் அவர் கோரியுள்ளார்.
2ம் உலகப் போருக்குப் பின்னர் விம்பிள்டன் போட்டிகள் முதல் முறையாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம் கொரோனாவைரஸ்தான். இருப்பினும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இந்த செய்தியை விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வீடியோ மூலம் பெடரர் பேச்சு
விம்பிள்டன் அமைப்பின் டிவிட்டர் பக்கத்தில் இந்த இன்ஸ்பிரேஷன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரோஜர் பெடரர் பேசுகிறார். கொரோனாவைரஸ் பரவலுக்கு எதிராக களத்தில் நின்று போராடி வரும் அனைவருக்கும் உற்சாகமூட்ட வேண்டும் என்று அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் புதிய சாம்பியனுக்காக குரல் கொடுக்கப் போகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

உணர்ச்சிகரமான பேச்சு
1877ம் ஆண்டு தொடங்கப்பட்ட விம்பிள்டன் போட்டியின் வரலாறு குறித்துப் பேசியுள்ள பெடரர்.. இந்த முறை நாம் அந்த விளையாட்டைக் காண முடியாத சோக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எந்த சாதனையும் இந்த முறை முறியடிக்கப்படாது. எந்த கோப்பையும் யாருடைய கையிலும் தவழாது. ஆனால் நமக்காக களத்தில் நின்று போராடிக் கொண்டிருப்போர் வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

போர்க்களத்தில் நிற்போர்
குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் என பலரும் போராடி வருகின்றனர். அந்த சாம்பியன்களுக்காக நாம் உற்சாகமாக குரல் கொடுப்போம். ஆதரவு தெரிவிப்போம் என்று உணர்ச்சிகரமாக கூறியுள்ளார் பெடரர். பெடரர், எட்டுமுறை ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையாளர் ஆவார். இந்த ஆண்டு விம்பிள்டன் ரத்தானது குறித்து தான் மனதளவில் சிதறிப் போய் விட்டதாக கூறியுள்ளார் பெடரர்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்
உலகெங்கும் டென்னிஸ் ரசிர்களும் இந்த முடிவால் சோகமாகியுள்ளனர். ஆனால் இங்கிலாந்தில் கொரோனாவைரஸ் தொடர்ந்து உக்கிரமாக இருந்து வருவதால் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜூன் 29ம் தேதி விம்பிள்டன் போட்டிகள் தொடங்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிக்கும், மகளிர் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப்பும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.


Click it and Unblock the Notifications