லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டிகளில் லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆட மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி இளம்வீரராக விஷ்ணு வர்தன், பயஸ் உடன் ஜோடி சேர்க்கப்பட்டார். இதனால் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஜோடி தோல்வியை தழுவியது.
இதில் அதிருப்தி அடைந்த அகில இந்திய டென்னிஸ் சங்கம், லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர மறுத்த மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகிய 2 பேருக்கும், வரும் 2014ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது.
2 ஆண்டுகளுக்கு டென்னிஸ் ஆட தடை விதிக்கப்பட்டதில் அதிருப்தி அடைந்துள்ள மகேஷ் பூபதி, இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ரோகன் போபண்ணா கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். நான் கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இந்த நிலையில் எங்கள் இருவரின் மீது இது போன்ற தடை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
எங்கள் இருவருக்கும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதன் காரணம் என்பது இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. எங்களின் மீது விதிக்கப்பட்ட தடை சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
கடந்த பல ஆண்டுகளாக எனக்கும், அகில இந்திய டென்னிஸ் சங்கத்திற்கும் இடையே பகை உணர்வு இருந்து வருகிறது. எனவே இது தனிப்பட்ட விரோதம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். ஆனால் எனது நண்பரும், ஜோடி வீரருமான ரோகன் போபண்ணாவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை எண்ணி வருத்தம் அடைகிறேன். நான் நீண்டகாலமாக மவுனமாக இருந்து வருகிறேன் என்றார்.