நோவாக் ஜோகோவிக்
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அப்போது ஆறு மாதங்களுக்கு அனைத்து டென்னிஸ் தொடர்களையும் ரத்து செய்தது ஏடிபி டென்னிஸ் அமைப்பு. அப்போது செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக் அதிரடி முடிவு எடுத்தார்.
கண்காட்சி டென்னிஸ் தொடர்
நிதி திரட்டுகிறோம் என கிளம்பிய அவர் கண்காட்சி டென்னிஸ் தொடர் ஒன்றை செர்பியா மற்றும் அருகாமை நாடுகளில் நடத்த திட்டமிட்டார். ஜூன் - ஜூலையில் இந்த டென்னிஸ் தொடர் நடக்க இருந்தது. ஜென் மாதம் செர்பியாவில் முதல் கட்ட போட்டிகள் நடந்தன.
முன்னெச்சரிக்கை இல்லை
அப்போது அதிக ரசிகர்களுக்கு அனுமதி அளித்து இருந்தனர் போட்டி நிர்வாகிகள். உள்ளே வந்த ரசிகர்களுக்கு எந்த வகையான முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படவில்லை. சமூக இடைவெளி என்பதே இல்லாமல் போட்டிகள் நடந்தன.
இரவு நேர பார்ட்டி
இது மட்டுமின்றி டென்னிஸ் வீரர்கள் போட்டி முடிந்த பின் இரவு நேர பார்ட்டிக்களில் வேறு கலந்து கொண்டனர். அப்போதும் யாரும் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை. கிரிகோர் டிமிட்ராவ், போர்னா கோரிக் என இரண்டு டென்னிஸ் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
கடும் விமர்சனம்
இதை அடுத்து அந்த தொடர் பாதியில் கைவிடப்பட்டது. தொடரை நடத்திய நோவாக் ஜோகோவிக் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அதன் பின் அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அந்த தொடரில் பங்கேற்ற பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
மன்னிப்பு
ரசிகர்கள் மற்றும் பிற டென்னிஸ் வீரர்கள் அந்த தொடரின் இடையே நடந்த இரவு நேர பார்ட்டி வீடியோக்களை வெளியிட்டு கடுமையாக விளாசினர். பின் நோவாக் ஜோகோவிக் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் அந்த சமயத்தில் விளையாட்டு தொடர்களை நடத்த திட்டமிட்டு இருந்த பல அமைப்புகளை அச்சத்தில் ஆழ்த்தியது.