இம்ரான் கான் காலம்
பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது இம்ரான் கான் கேப்டனாக இருந்த போது தான். அவர் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992இல் உலகக்கோப்பை தொடரை வென்று சாதனை புரிந்தது. அதன் பின் கொஞ்சம், கொஞ்சமாக அந்த அணி கிரிக்கெட் உலகில் மங்கத் துவங்கியது.
உலகக்கோப்பை வெல்லவில்லை
1992க்குப் பின் பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட உலகக்கோப்பை வெல்லவில்லை. இந்த நிலையில், அதற்கு காரணம் இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த வாசிம் அக்ரம் தான் என அதிரடி புகாரை முன் வைத்துள்ளார் அமீர் சோஹைல்.
1996 கேப்டன்கள் மாற்றம்
1996 உலகக்கோப்பை தொடருக்கு ஓராண்டுக்கு முன் வரை சலீம் மாலிக் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். ஓராண்டுக்கு முன் அவர் நீக்கப்பட்டு ரமீஸ் ராஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் சரியில்லை என உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வாசிம் அக்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
1999 உலகக்கோப்பை இறுதியில் தோல்வி
அதே போல, 1999 உலகக்கோப்பை தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்தார் வாசிம் அக்ரம். அந்த முறை பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வக்கார் யூனிஸ் கேப்டனாக இருந்தார். அப்போது அணியில் வாசிம் அக்ரம் மூத்த வீரராக இருந்தார். அப்போதும் பாகிஸ்தான் உலகக்கோப்பை வெல்லவில்லை.
சலீம் மாலிக் நீக்கம்
இது பற்றி அமீர் சோஹைல் கூறுகையில், "இது மிகவும் எளிது. 92 உலகக்கோப்பையை ஒரு பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். 1996 உலகக்கோப்பை பற்றி பேசுங்கள். 1995இல் ரமீஸ் ராஜா கேப்டன். சலீம் மாலிக் அதற்கு முன் கேப்டனாக இருந்தார்." என்றார்.
வெற்றிகரமான கேப்டன்
மேலும், "சலீம் மாலிக் வெற்றிகரமான கேப்டனாக இருந்தார். அவர் இன்னும் ஓராண்டு கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரம் கேப்டனாகி இருக்க முடியாது. 1996 உலகக்கோப்பையில் அணியை வழி நடத்தி இருக்க முடியாது." எனக் கூறினார் அமீர் சோஹைல்.
உலகக்கோப்பைக்கு முன் நடக்கும் மாற்றம்
"2003 உலகக்கோப்பை வரை பார்த்தால், ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்கு முன்பும் கேப்டனை நீக்கி விட்டு, அந்த இடத்தில் வாசிம் அக்ரமை நியமிக்கும் முயற்சி இருந்தது." என தன் சந்தேகத்தை விவரித்தார் அமீர் சோஹைல். வாசிம் அக்ரம் மீது மற்றொரு புகாரையும் வைத்துள்ளார் அவர்.
வெல்லாமல் பார்த்துக் கொண்டார்
"பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு வாசிம் அக்ரம் ஆற்றிய மிகப் பெரிய செயல், 92க்குப் பின் பாகிஸ்தான் உலகக்கோப்பை வெல்லாமல் பார்த்துக் கொண்டது தான். இம்ரான் கான் அவருக்கு மரியாதை அளித்து ஜனாதிபதி விருது வழங்கினார்." என அதிர்ச்சி புகாரை முன் வைத்தார்.
நாட்டுப்பற்று இல்லை
மேலும், "வாசிம் அக்ரம் பாகிஸ்தான் நாட்டுக்கு உண்மையாக இருந்திருந்தால் நாம் எளிதாக 96, 99 மற்றும் 2003 உலகக்கோப்பை தொடரை வென்று இருப்போம்" என வாசிம் அக்ரமின் நாட்டுப் பற்றையும் சேர்த்து கேள்விக்குள்ளாக்கினார் அமீர் சோஹைல்.
எல்லாம் ஒரு காரணத்துக்காக நடந்துள்ளது
ஒவ்வொரு உலகக்கோப்பைக்கு முன்னும் கேப்டன் பதவியில் வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டதை குறிப்பிட்டு, "இந்த நாடகம் எல்லாம் ஒரு காரணத்துக்காக நடந்துள்ளது. அது விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு பின் இருப்பவர்கள் முன்னே கொண்டு வரப்பட வேண்டும்" என அதிர்ச்சி அளித்தார் அமீர் சோஹைல்.