ஜடேஜாவுக்கு வந்த அதே நிலை.. பும்ராவுக்கு பிசிசிஐ போட்ட நிபந்தனை.. டீமுக்கு வரனும்னா அதை செய்யுங்க!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் ரவீந்திர ஜடேஜா செய்த விஷயத்தை ஜஸ்பிரித் பும்ராவும் செய்தாக வேண்டும் என பிசிசிஐ சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அணியுடனான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்துடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மோதவுள்ளன.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

என்ன ஆனது?
கடந்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக முதுகுவலி பிரச்சினை எனக்கூறிய பும்ரா உடனடியாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையை தவறவிட்ட பும்ரா, சுமார் 5 மாத இடைவெளிக்கு பிறகு இலங்கை தொடரில் இடம்பெற்றார். ஆனால் மீண்டும் முதுகுவலி பிரச்சினை இருப்பதாக கூறி ஒரு போட்டியில் கூட விளையாடாமல் வெளியேறினார்.

பும்ராவுக்கு நிபந்தனை
இந்நிலையில் இந்திய அணிக்கு வருவதற்காக பும்ராவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் அவர் முதலில் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது வழக்கம். இதன் பின்னர் உள்ளூர் போட்டியான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சென்று சிறப்பாக விளையாடி காட்டினால் மட்டுமே தேசிய அணிக்கு அழைக்கப்படுவார்.

ஜடேஜாவின் நிலைமை
ரவீந்திர ஜடேஜாவுக்கும் தற்போது இதே நிபந்தனை தான். ஜடேஜா விரைவில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடவுள்ளார். அவருடன் பும்ராவும் செல்லவுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகளுக்கு மட்டுமே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களை நிரூபித்துவிட்டால், அடுத்துள்ள 2 போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படலாம்.

பிசிசிஐ முடிவு
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் தான் நடக்கிறது. கடந்தாண்டு வீரர்களை அவசர அவசரமாக அழைத்த போது தான் காயம் பெரிதாக டி20 உலகக்கோப்பையை தவறவிட்டனர். எனவே இந்த முறை நீண்ட ஓய்வுகளை கொடுத்துவிட்டு கூட அழைக்கலாம் என்பதில் பிசிசிஐ மிக தெளிவாக உள்ளது.


Click it and Unblock the Notifications