தவானை வச்சுகிட்டு அந்த 3 பேரை தாங்க.. டெல்லியிடம் பண்டமாற்று பேரம் பேசும் சன்ரைசர்ஸ்
மும்பை : 2019ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாட்டில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டு வருகின்றன.
ஐபிஎல் அணிகள் வீரர்களை மாற்றிக் கொள்ளவும், ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை பயன்படுத்தி வீரர்களை மாற்றியும், வாங்கியும் வருகின்றன ஐபிஎல் அணிகள். மும்பை இந்தியன்ஸ் அணி முந்திக் கொண்டு இந்த வீரர்கள் மாற்றத்தை துவங்கி வைத்தது.

வியாபாரத்தை துவங்கிய மும்பை
தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டி காக்கை, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் இருந்து வாங்கியது. இது போல சில வீரர்களை மற்ற அணிகள் விடுவித்தும், வாங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு உள்ளன.

விலை குறைவு என கோபம்
ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ஷிகர் தவான் வேறு அணிக்கு மாற்றப்படுவார் என கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வந்தது. அதற்கு காரணம், தவான் சென்ற ஐபிஎல் தொடரில் தனக்கு அளிக்கப்பட்ட விலை மிக குறைவு என கருதியதாலும், தன்னை கேப்டன் பதவியில் அமர்த்தவில்லை என்ற கோபத்திலும் இருப்பதாக கூறப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் பற்றிய வதந்தி
தவான், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் செல்வார். அங்கே ரோஹித் சர்மா, தவானுக்கு ஆதரவு அளிப்பார் என ஒரு வதந்தி சென்ற வாரம் வலம் வந்தது. ஆனால், தற்போது அதற்கு மாறாக, வேறொரு செய்தி வந்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ்-க்கு போகிறாரா?
தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு செல்ல உள்ளார் என கூறப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணி, டெல்லி அணியின் மூன்று வீரர்களை வாங்கிக் கொண்டு, பதிலுக்கு தங்களுக்கு ஒத்துவராத தவானை அவர்களிடம் மாற்றி விட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணி மாற்றம் நடக்குமா?
டெல்லி அணியின் விஜய் ஷங்கர், அபிஷேக் சர்மா மற்றும் ஷாபாஸ் நதீம் ஆகிய மூவரை பெற்றுக் கொண்டு, தவானை இடம் மாற்ற பேரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தவானின் விலை 5.2 கோடி ஆகும். டெல்லி அணியின் மூன்று வீரர்களின் மொத்த விலை 6.95 கோடி ஆகும். தவானை கொடுத்துவிட்டு, அவர்கள் மூவரையும் சன்ரைசர்ஸ் அணி வாங்கிக் கொண்டால், வித்தியாசத் தொகையை மட்டும் பணமாக செலுத்தினால் போதும். இந்த மாற்றம் இன்னும் சில தினங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications