மஞ்ச ஜெர்சி போடாம இருக்க முடியல.. கண்ணீர் விட்ட டோணி.. ஆறுதல் சொன்ன ரெய்னா!- வீடியோ
சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாமல் இருந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது என்று டோணி குறிப்பிட்டுள்ளார். இதனால் இரண்டு வருடம் மிகவும் கஷ்டப்பட்டதாக நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டோணி பேசியுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தினமும் சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தினமும் சென்னை அணி வீரர்கள் செல்லும் வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்று உற்சாகம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் சென்னை அணி வீரர்களும் வித்தியாசமாக வீடியோ வெளியிட்டு வைரலாகி வருகிறார்கள்.

பெரிய கொண்டாட்டம்
இரண்டு வருடங்களுக்கு பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணி நியமிக்கப்பட்டு இருக்கிறது. அஸ்வினை தவிர முக்கியமான வீரர்கள் எல்லோரும் சென்னை அணிக்கு திரும்பிவிட்டார்கள். சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருப்பதால ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
கண்ணீர் விட்டார்
இந்த நிலையில் நேற்று நடந்த விழா ஒன்றில் டோணி பேசிய போது கண்ணீர் விட்டுள்ளார். முதல்முறையாக அவர் இப்படி பொது நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விடும் அளவிற்கு பேசி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிய பொழுதுகளை நினைவு கூர்ந்து அவர் பேசினார். மீண்டும் அணிக்கு திரும்பியது பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

பெரிய கஷ்டம்
மேலும் ''இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை அணி தடை செய்யப்பட போது பெரிய அளவில் கஷ்டப்பட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னை மஞ்சள் ஆடையில் பார்க்காமல் இருப்பது எனக்கே பெரிய கஷ்டமாக இருந்தது. இரண்டு வருடம் பொறுத்துக் கொண்டேன்'' என்றார்.

சின்ன தல
மேலும் ''சென்னை அணிக்காக நான் மிகவும் நேர்மையாக இருந்தேன். யாரிடமும் என்னை பற்றி நான் நிரூபிப்பது இல்லை, என்னிடம் மட்டுமே என்னை நிரூபித்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு கண்ணீர்விட்டார். உடனே ரெய்னா எழுந்து வந்து அவருக்கு கை கொடுத்து, தண்ணீர் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications