டெல்லி: கேப்டன் கூல், தல என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அனைவரும் விரும்புவதற்கு காரணம் அவருடைய மிகவும் எளிமையான, அனைவருடனும் பழகும் தன்மைதான்.
போட்டிகளின் போது மைதானத்தில் அமைதியாக செயல்பட்டு, அனைவரையும் அரவணைத்து அழைத்து செல்பவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக விளையாடும்போதும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போதும் இதை அனைவரும் நேரில் பார்த்திருப்பார்கள்.
விமான நிலையத்தில் வராண்டாவில் படுத்து தூங்கும் அளவுக்கு மிகவும் எளிமையானவர் தோனி. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர் ராஞ்சியில் நடந்த ஒரு போட்டியின்போது, மைதானத்துக்கு வெளியே உள்ள, முன்பு தான் வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு சென்று, கடைக்காரரிடம் பேசிய நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் நடந்துள்ளன.
மிகச் சிறந்த கேப்டன், மிக மிக சிறப்பான விக்கெட் கீப்பர், அதிரடி ஆட்டக்காரர், மைதானத்தின் தன்மையை அறிந்து வியூகங்களை வகுக்கக் கூடியவர் தோனி. அதற்காக ஒவ்வொரு போட்டிக்கும் முன், மைதானத்தின் தன்மையை நேரில் பார்த்து விடுவார். அந்த வகையில், அவர் சென்னை சேப்பாக்கம் மற்றும் சிஎஸ்கேவின் இரண்டாவது சொந்த மைதானமான புனேயில் உள்ள மைதானங்களை தயார் செய்யும்போது, அவர் பார்வையிட்ட படங்கள் தற்போது வைரலாக பரவியுள்ளன.
உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி, இவ்வாறு மைதானத்தை தயார் செய்யும் ஊழியர்களை அவர் சந்தித்தது தொடர்பான படங்களை, சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ஊழியர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளது. அது தோனியின் மீதான மதிப்பை மேலும் கூட்டியுள்ளது. தோனியைப் புகழ்ந்து தொடர்ந்து பலர் அதற்கு பதில் பதிவிட்டு வருகின்றனர்.