வினை ஆரம்பம்
இந்தியாவின் இரண்டாவது உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது. அந்தப் போட்டியின் 9வது ஓவரில் தான் வினை ஆரம்பித்தது. பாட் கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரில் தவானின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
மாற்று வீரர் யார்?
அதன் பின், எடுத்த ஸ்கேன் அறிக்கையின் படி தவான் அடுத்த மூன்று வார காலத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என தெரிந்தது. தவானுக்கு மாற்றாக யார் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்ற பிரச்சனை ஒருபுறம் சூடு பிடிக்க, மறுபுறம் துவக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்விக்கு எல்லோரும் கை காட்டிய ஒரே வீரர் கேஎல் ராகுல்.
துவக்கம் அளிக்கும் ராகுல்
ராகுல் துவக்க வீரர் தான் என்றாலும், உலகக்கோப்பை தொடரில் அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் களமிறங்கி வருகிறார். தற்போது தவான் காயமடைந்து இருக்கும் நிலையில், நல்ல பார்மில் இருக்கும் ராகுல் தான் பொருத்தமான துவக்க வீரர் என்ற முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்டது.
ரோஹித் - தவான் புரிதல்
ஆனால், ரோஹித் சர்மா - ராகுல் ஜோடி சில போட்டிகளில் தான் விளையாடி உள்ளது. ரோஹித் சர்மா - தவான் ஜோடி பல ஆண்டுகளாக துவக்கம் அளித்து வருவதால், அவர்களிடயே அதிக புரிதல் உண்டு.
நல்ல புரிதல் இருந்தது
எப்போது ரன் ஓடலாம். எப்போது அடித்து ஆடலாம். ஒருவர் ரன் குவிக்கத் திணறினால், அவருக்கு சிறிது நேரம் அளித்து போட்டியை மற்றவர் தன் கைகளில் எடுத்துக் கொண்டு ஆடுவது என மனதளவில் ரோஹித் - தவான் இடையே நல்ல புரிதல் இருக்கிறது.
புரிதல் இருக்குமா?
இதே புரிதல் ரோஹித் சர்மா - ராகுல் இடையே ஏற்படுமா? என்பதே இந்திய அணியின் புதிய தலைவலி. புரிதல் இல்லாத பட்சத்தில் இவர்கள் அவசரப்பட்டு அடித்து ஆடி தங்கள் விக்கெட்களை இழக்கவோ, ரன் அவுட் ஆகவோ கூட வாய்ப்பு உள்ளது.
நாளை தெரியும்
எனினும், பவர்பிளே ஓவர்களை இவர்கள் கடந்து விட்டால், பின்னர் இருவரும் அழுத்தம் இல்லாமல் ஆடலாம். நாளை நடைபெற உள்ள இந்தியா - நியூசிலாந்து போட்டி வரை, புதிய துவக்க ஜோடி சரி வருமா என்ற பதற்றம் இந்திய அணியிடம் இருக்கும். அந்தப் போட்டியில் எல்லோர் கண்களும் ரோஹித் - ராகுல் மீது தான் இருக்கும். சவாலை சமாளிக்குமா புதிய ஜோடி?