வெஸ்ட் இண்டீஸ் தொடர்
உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என முன்பு கூறப்பட்டு இருந்தது.
நிரந்தர கேப்டன்
அதே சமயம், ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மாவை நிரந்தர கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, பிசிசிஐ உள்ளேயும் வலுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சிறப்பாக செயல்பட்டால் அவரை தொடர்ந்து கேப்டனாக நியமித்து விடுவார்கள் என்ற பேச்சும் கிளம்பியது.
சாமர்த்திய முடிவு
கேப்டன் கோலி சாமர்த்தியமாக திட்டமிட்டு செயல்பட்டு தனக்கு ஓய்வு வேண்டாம் என வேக வேகமாக அறிவித்து இருக்கிறார். நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருவதால் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வது தான் நல்லது என பிசிசிஐ-யில் கூறி இருக்கிறார்கள். அதையும் மறுத்து விட்டாராம் கோலி.
காரணம் சொன்னார்
அணிக்கு தான் தேவை. உலகக்கோப்பைக்கு பின் வீரர்கள் துவண்டு போய் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் அணியுடன் இருக்க வேண்டும் என்று காரணம் கூறி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இணைந்தார்.
பேச்சு அடங்கியது
இதைத் தொடர்ந்து அந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, கோலி மூன்று வித கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக தன் பதவியை தக்க வைத்துக் கொண்டு இருந்தார். இத்தோடு கேப்டன் மாற்றம் என்ற பேச்சும் அடங்கியது.
ஓய்வே இல்லை
கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடத் துவங்கினார் கோலி. இடையே நியூசிலாந்து டி20 தொடரில் மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டார். பின்னர் தொடர்ந்து நியூசிலாந்து ஒருநாள் போட்டிகள், இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடர், ஐபிஎல், உலகக்கோப்பை என இடைவிடாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார்.
பாதிப்பு ஏற்படுத்தும்
இப்படி இடைவிடாமல் கிரிக்கெட் ஆடி வந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பிடிவாதமாக ஆடப் போகிறார் கோலி. இது அவரது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கவலையில் இருக்கிறது பிசிசிஐ.